பாஜக ஆளும் மாநிலமான குஜராத்தில் இந்துக்கோவிலை பாஜக கட்சியினரே இடித்து தள்ளியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் நவ்சாரி நகரில் உள்ள சர்வோதய் சொசைட்டியில் ராதா கிருஷ்ணர் கோயில் உள்ளது. இந்த கோயில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதாக கூறி, அங்குள்ள ஒரு பில்டரின் அறிவுறுத்தலின் பேரில் பாஜக ஆளும் நவ்சாரி முனிசிபல் கார்ப்பரேஷன் அதிகாரிகள் புல்டோசர் மூலம் கடந்த மாதம் 25ம்தேதி இடித்து தள்ளினர். இதனை எதிர்த்து போராட்டம் நடத்திய பெண்கள் மீது போலீசார் அத்துமீறிய தாக்குதலில் ஈடுப்பட்டுள்ளனர்.

பாஜகவில் இருந்து 1100 பேர் விலகல்!
இதனைத்தொடர்ந்து பாஜகவைச் சேர்ந்த சுமார் 1,100 பேர் கட்சி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அத்துடன் மேலும் 1500 பேர் பாஜக கட்சியில் இருந்து விலக தயாராக உள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையே நவ்சாரி பாஜக எம்எல்ஏ பியூஷ் தேசாய் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு எதிராகவும் அங்குள்ள மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அவர்கள் ஆளும் பாஜக அரசுக்கு 3 கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர். முதலாவது, ராதா கிருஷ்ணர் கோயில் இடிக்கப்பட்ட அதே இடத்தில் புதிய கோயில் கட்ட வேண்டும், இரண்டாவது, நவ்சாரி நகர் முனிசிபல் தலைவரும் பாஜகவை சேர்ந்தவருமான ஜிகர் ஷா பதவி விலக வேண்டும், மூன்றாவது, நவ்சாரி பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது தாக்குதலில் ஈடுபட்ட உள்ளூர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

போராட்டத்திற்கு காங்கிரஸ் மற்றும் ஆத் ஆத்மி ஆதரவு!
பொதுமக்களுக்கு ஆதரவாக வன்ஸ்டா காங்கிரஸ் எம்எல்ஏ ஆனந்த் படேல் மற்றும் ஆம் ஆத்மி குஜராத் தலைவர் கோபால் இத்தாலியா ஆகியோர் ஆதரவு தெரிவித்து திங்கள்கிழமை நடந்த போராட்டத்தில் பங்கு கொண்டனர்.
இதுகுறித்து ஆனந்த் படேல் எம்எல்ஏ கூறுகையில், “நவ்சாரி நகரில் கோவில்கள், மசூதிகள் உள்ளிட்ட 23 கட்டிடங்கள் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளன. இது போன்ற கோவில்களை ஏன் இடிக்கக்கூடாது? கோவில் பிரச்சனையை வைத்து பாஜக ஆட்சிக்கு வந்தது, இப்போது அதே கட்சி கோவில்களை இடித்து வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்களை குறிவைத்து போலீசார் நடந்து கொண்ட விதம் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த அராஜக செயலில் ஈடுபட்ட காவல்துறை ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.
ஆம் ஆத்மி குஜராத் தலைவர் கோபால் இத்தாலியா கூறுகையில், ராதா கிருஷ்ணர் கோவில் இடிப்புக்கு காரணமான பாஜக தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் . குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவிலை இடித்ததற்கு பாஜக தலைவர்கள் நாட்டின் கோடிக்கணக்கான இந்துக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி., சஞ்சய் சிங், டெல்லியில் அளித்த பேட்டியில், “இந்தியாவில் இல்லையென்றால் பாகிஸ்தானிலா இந்துக்கள் கோவில் கட்டுவார்களா? இந்துக்களுடன் பாஜகவுக்கு என்ன பகை? என்று கேள்வி எழுப்பினார்.

தொடரும் பொதுமக்கள் போராட்டம்!
இடிக்கப்பட்டுள்ள கோவிலுக்கு பின்னால் உள்ள நிலத்தை ஒரு ரியல் எஸ்டேட் பில்டர்கள் குழு வாங்கியுள்ளது. இப்போது கோவில் பகுதியையும் அபகரிக்கும் நோக்குடன் தற்போது ஆளும் பாஜக அரசின் உதவியோடு ராதா கிருஷ்ணர் கோவில் இடிக்கப்பட்டுள்ளது. என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனை கண்டித்து இதுவரை பாஜகவை ஆதரித்து வந்த மக்கள் தொடர்ந்து ஒரு வாரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
சோனியா, ராகுல் வீட்டை போலீஸ் சுற்றி வளைப்பு: என்ன நடக்கிறது டெல்லியில்?