ஆம் ஆத்மியின் குஜராத் மாநில முதல்வர் வேட்பாளராக அக்கட்சியின் தேசிய இணைப் பொதுச் செயலாளரான இசுதான் கத்வி அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
குஜராத்தில் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என நேற்று (நவம்பர் 3) தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
இந்த முறை குஜராத்தில் மும்முனை போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் மற்றும் பா. ஜ. க கட்சிகளுக்கு எதிராக ஆம் ஆத்மி புதிதாக களமிறங்குகிறது.
இதையடுத்து அக்கட்சி, பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலின்போது கையாண்ட ’கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார்’ என்ற மக்களிடம் கருத்துக் கேட்கும் அணுகுமுறையை குஜராத்திலும் தொடர்ந்தது.
இதற்காக ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசியபோது,
’ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளராக யார் வர வேண்டும் என்பது குறித்து குஜராத் மக்களே தீர்மானிக்கலாம்’ என்று தெரிவித்திருந்தார்.

இதற்காக ஆம் ஆத்மியின் முன்னணி தலைவர்களான குஜராத் மாநில ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கோபால் இத்தாலியா, தேசிய பொதுச் செயலாளர் இசுதான் கத்வி, பொதுச் செயலாளர் மனோஜ் சொராதியா உள்ளிட்டோரின் பெயர்களை கட்சி பரிந்துரைத்தது.
இவர்களில் யாராவது ஒருவரை தேர்வு செய்து தங்களது விருப்பத்தைத் தெரிவிக்குமாறு கூறியதுடன் அதற்கான மொபைல் எண்ணையும், இ-மெயில் முகவரியையும் வழங்கியிருந்தது.
மேலும், நவம்பர் 3ஆம் தேதி மாலை வரை மக்கள் இந்த கருத்து கேட்பில் பங்கேற்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மக்களின் கருத்துகளுக்கு ஏற்ப இன்று (நவம்பர் 4) ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என அவர் தெரிவித்திருந்தார்.
அதன்படி, இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கெஜ்ரிவால் முடிவை அறிவித்தார்.
குஜராத் முதல்வர் வேட்பாளருக்கு நடைபெற்ற வாக்கெடுப்பில் இசுதான் கத்வி 73 சதவீத வாக்குகளை பெற்றுள்ளதாக அவர் கூறினார்.
இதையடுத்து , மேடையில் இருந்த இசுதான் காத்விக்கு கட்சி நிர்வாகிகள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.

யார் இந்த இசுதான் கத்வி?
ஆம் ஆத்மி கட்சியின் குஜராத் முதல்வர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இசுதான் கத்வி அக்கட்சியின் தேசிய இணைப் பொதுச் செயலாளராகவும், தேசிய செயற்குழு உறுப்பினராகவும் இருக்கிறார்.
இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த இவர், இதற்கு முன்பு தொலைக்காட்சி ஒன்றில் செய்தியாசிரியராகப் பணிபுரிந்தார்.
அந்த சேனலில், அவர் தொகுத்து வழங்கிய மகாமந்தன் என்னும் நிகழ்ச்சி மக்களிடம் பிரபலமடைந்தது. அதன்பிறகு அவர், குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து மேலும் பிரபலமானார்.
தொலைக்காட்சி மூலம் பிரபலமான இசுதான் கத்விதான், இன்று அம்மக்களாலேயே ஆம் ஆத்மியின் குஜராத் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். கடந்த ஆண்டுதான் இவர், ஆம் ஆத்மியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெ.பிரகாஷ்
திமுக நிர்வாகி மீது தேசிய மகளிர் ஆணையத்தில் குஷ்பூ புகார்!
டிஜிட்டல் திண்ணை: திமுகவின் பெரியண்ணன் தனம்- காங்கிரஸ் எம்.பி.க்கள் குமுறல்!