லஞ்சம் வாங்கிய புகாரில் மதுரை மத்திய ஜிஎஸ்டி துணை ஆணையர் சரவணக்குமார் உள்ளிட்ட மூன்று அதிகாரிகளை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
மதுரையைச் சேர்ந்த கார்த்திக், டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வருகிறார். இவர் ஜிஎஸ்டி வரி பாக்கி செலுத்துவதற்காக மதுரை பிபி குளத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில், ஜிஎஸ்டி பிரிவில் துணை ஆணையராக இருக்கும் சரவணக்குமாரை அணுகியுள்ளார்.
ஜிஎஸ்டி வரி பாக்கியில் குறிப்பிட்ட தொகையை குறைப்பதற்காக, ரூ.3.50 லட்சம் லஞ்சமாக சரவணக்குமார் கேட்டதாக மதுரை சிபிஐ அலுவலகத்தில் கார்த்திக் புகாரளித்துள்ளார்.

சிபிஐ அதிகாரிகள் ஆலோசனையின் படி, நேற்று (டிசம்பர் 17) இரவு வருமான வரித்துறை அலுவலகத்தில் கண்காணிப்பாளர்களாக பணிபுரியும், அசோக் குமார், ராஜ்பீர் ராணா ஆகியோரிடம் கார்த்திக் ரூ.3.50 லட்சம் லஞ்சம் கொடுத்துள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த சிபிஐ அதிகாரி கலைமணி, இன்ஸ்பெக்டர் சரவணன் டீம் அசோக் குமார், ராஜ்பீர் ராணா அகியோரை கைது செய்தனர். சிபிஐ விசாரணையில், லஞ்ச பணத்தை துணை ஆணையர் சரவணக்குமார் வாங்க சொன்னது தெரியவந்தது. மூன்று பேரையும் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில், தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் உள்ள சரவணக்குமார் வீட்டில் சிபிஐ போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.
மதுரையில் லஞ்சம் வாங்கிய புகாரில் ஜிஎஸ்டி அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருப்பது முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…