மாநில பாடத்திட்டம் குறித்த சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த ஆளுநர், புதிய கல்விக் கொள்கைக்கு பி.ஆர்.ஓ.போல் செயல்படுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இன்று (செப்டம்பர் 2) விமர்சித்துள்ளார்.
சென்னை சேத்துப்பட்டில் உள்ள கே.டி.சி.டி.பெண்கள் மேல்நிலை பள்ளியின் நுாற்றாண்டு விழா நேற்று நடந்தது. இதில் கலந்துகொண்டு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், ”பள்ளி மாணவர்களுக்கு, நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த வேண்டும். தேசிய பாடத்திட்டத்துடன் ஒப்பிடும் போது, மாநில பாடத்திட்டம் தரம் குறைவாக உள்ளது. மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு, ‘ரோபோட்டிக்ஸ்’ போன்றவை பற்றிய பார்வை, அறிவுத் திறன் குறைவாக உள்ளது” என ஆளுநர் ரவி பேசியிருந்தார்.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஆளுநரின் கருத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் ஆளுநர் கடந்த காலங்களில் புதியக் கல்விக் கொள்கையை பற்றி அனைத்து மேடைகளிலும் பேசி வந்தார். ஆனால், ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏற்காது என்று உறுதியாகத் தெரிந்தவுடன், மாநில கல்விக் கொள்கை மீது அவதூறையும், சேற்றையும் வீசத் தொடங்கியுள்ளார்.
இத்தனை ஆண்டு காலம் தமிழ்நாட்டில் ஆளுநராக இருந்தவர், மாநில கல்விக் கொள்கை பற்றி கருத்துக் கூறாமல் தற்போது தரம் தாழ்ந்து விமர்சிப்பது மிகவும் கண்டனத்துக்குரியது.
ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு பி.ஆர்.ஓ.போல் செயல்படுவதை விட்டுவிட்டு தமிழ்நாட்டின் கல்விக் கொள்கையைப் பற்றிய தன்னுடைய கருத்துக்கு ஆளுநர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்” என செல்வப்பெருந்தகை குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
Paris Paralympics : தங்கம் வென்ற இந்தியாவின் முதல் ஐஐடி பட்டதாரி… யார் இந்த நிதேஷ் குமார்?