ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில் மீண்டும் சட்டம் இயற்றப்பட்டு அனுப்பப்பட்டால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டத்தால் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனால் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க தமிழக சட்டப்பேரவையில் சட்டம் இயற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என் ரவி நேற்று திருப்பி அனுப்பினார்.
அதில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் சட்டத்தை கொண்டு வர தமிழக சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று (மார்ச் 9) நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பி வைத்தது தொடர்பாகவும், மீண்டும் சட்டம் இயற்றுவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட உள்ளது.
இந்தசூழலில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி,
“ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க சட்டம் இயற்ற சட்டமன்றத்திற்கு உரிமை உண்டு என்று நீதிமன்றம் சொல்லி இருக்கிறது.
ஏற்கனவே இயற்றப்பட்ட சட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கிவிட்டு புதிய சட்டத்தை இயற்றுங்கள் என்று நீதிமன்றம் சொல்கிற போது , அதிகாரம் இல்லை என்று ஆளுநர் எந்த அடிப்படையில் இந்த சட்ட மசோதாவை திருப்பி அனுப்பினார் என்று புரியவில்லை.
இப்போதுதான் முதல் முறையாக திருப்பி அனுப்பி இருக்கிறார். இதற்கு முன்பாக அந்த சட்டம் தொடர்பாக சில கேள்விகளை கேட்டு அனுப்பியிருந்தார்.
மீண்டும் நாங்கள் சட்டமன்றத்தில் புதிய சட்டத்தை இயற்றிஅனுப்பினால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும். அதைத் தவிர அவருக்கு வேறு வாய்ப்பே கிடையாது என்று கூறியுள்ளார்.
பிரியா
ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!
ஜெயம் ரவி வெற்றிகரமான ஹீரோ தானா?!