சிங்கப்பூரில் தஞ்சம் அடைந்திருந்த இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து வெளியேறினார்.
இலங்கையில் கடுமையான பொருளாதார மற்றும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கு ராஜபக்சே குடும்பத்தினரே காரணம் என்று கூறி மக்கள் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சூழலில், கடந்த ஜூலை 9 ஆம் தேதி ஆயிரக்கணக்கானோர் இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின்னர், கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் வீட்டிற்குள் நுழைந்து வீட்டை அடித்து நொறுக்கினர்.

போராட்டக்காரர்கள் வருவதற்குள் கோத்தபய ராஜபக்சே குடும்பத்துடன் ராணுவ விமானத்தில் ஜூலை 13ஆம் தேதி மாலத்தீவுக்கு தப்பிச் சென்றார். மாலத்தீவில் இருந்தபடியே அவர் சிங்கப்பூருக்கு சென்றார்.
முதலில் 15 நாட்கள் மட்டுமே சிங்கப்பூரில் தங்குவதற்கு விசா வழங்கப்பட்டது. பின்னர் மீண்டும் 15 நாட்களுக்கு விசாவை நீட்டித்தது சிங்கப்பூர் அரசு. இந்தநிலையில் கோத்தபய ராஜபக்சேவின் விசா காலம் இன்றுடன்(ஆகஸ்ட் 11) முடிவடைந்தது.

ஏற்கனவே கோத்தபய ராஜபக்சே தாய்லாந்தில் தங்குவதற்கு அனுமதி கேட்டு இருப்பதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் டானி சங்கிராட் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
அதில், ”இலங்கையின் உயர் பதவி அந்தஸ்து கொண்ட பாஸ்போர்ட் வைத்திருப்பதால் கோத்தபய ராஜபக்சே விசா இல்லாமல் தாய்லாந்து நாட்டில் 90 நாட்களுக்கு தங்கலாம் என்றும் இது தற்காலிகமான அனுமதிதான்.
தாய்லாந்து நாட்டில் தங்குவதற்கு கோத்தபய ராஜபக்சே எங்களிடம் அடைக்கலம் கேட்கவில்லை” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி சிங்கப்பூரில் இருந்து வெளியேறிய கோத்தபய தாய்லாந்து நாட்டில் தஞ்சம் அடைந்து இருக்கிறார். தாய்லாந்தில் அவர் எங்கு தங்கியிருப்பார் என்ற தகவல் வெளியாகிவில்லை. 90 நாட்கள் விசா காலம் முடிந்த பிறகு அவர் எந்த நாட்டுக்கு செல்வார் என்பது பின்னர் தெரியவரும்.
கலை.ரா