காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கட்சியிலிருந்து வெளியேறிய நிலையில் அதற்கு பதிலளிக்கும் விதமாக ராகுலின் பழைய வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
50 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து வந்த குலாம்நபி ஆசாத் ராகுல் மீது அதிருப்தி தெரிவித்து கட்சியில் இருந்து இன்று(ஆகஸ்ட் 26) விலகினார்.
ராகுல் அரசியலில் முதிர்ச்சியற்றவர்,அவரது குழந்தைத்தனத்தால் தான் காங்கிரஸ் தோல்வியை தழுவுகிறது என்று கடுமையாக குற்றம் சாட்டி சோனியாகாந்திக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்த நிலையில் ஆசாத்துக்கு பதில் தருவது போன்று ராகுல்காந்தியின் பழைய வீடியோ வெளியாகி அக்கட்சியினரால் பகிரப்பட்டு வருகிறது.
இந்தியில் இருக்கும் அந்த வீடியோவில், பயம் உள்ளவர்கள் கட்சியில் இருந்து வெளியேறுங்கள், எங்களை நம்புவர்கள் மட்டும் உடன் இருங்கள் என்று பேசியிருக்கிறார்.
குலாம் நபி ஆசாத், ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் சாயலை பிரதிபலிப்பது போன்று இருக்கிறது என்று விருதுநகர் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டியிருக்கிறார்.
நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் மக்கள் நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பவர் ராகுல்காந்தி.
ஆனால் அவரை குலாம் நபி ஆசாத் போன்ற மூத்த தலைவர் மோசமாக விமர்சித்திருப்பது கவலையும், வேதனையும் அளிப்பதாக மாணிக்கம் தாகூர் கூறியிருக்கிறார்.
இதேபோன்று எம்.பி. ஜோதிமணி, பல தசாப்தங்களாக நீங்கள் பொறுப்பில் இருந்த மாநிலங்கள் மற்றும் அவற்றின் வளர்ச்சி பற்றி நீங்கள் குறிப்பிடவில்லை என்பது ஆச்சரியமளிக்கிறது.
கருணையோடும் கண்ணியத்தோடும் வெளியேறுங்கள். உங்களை எங்களின் மூத்த தலைவர் என்ற முறையில் நாங்கள் இன்னும் மதிக்கிறோம் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதவிட்டு இருக்கிறார்.
காங்கிரஸ் மூத்த நிர்வாகியும், ராஜ்யசபா எம்.பியுமான ஜெய்ராம் ரமேஷ், தலைமை யாரை மிகவும் மதித்ததோ, அவரே ராகுல்காந்தி மீது தனிப்பட்ட தாக்குதல் நடத்தி தனது உண்மையான குணத்தை வெளிப்படுத்தியுள்ளார். முதலில் பார்லிமென்டில் மோடிக்காக கண்ணீர்விட்டது, பிறகு பத்ம விபூஷன் வழங்கப்பட்டது, தற்போது கட்சியில் இருந்து விலகியது இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும்போது இவை தற்செயலாக நடந்த நிகழ்வுகள் அல்ல என்று தெரிகிறது என்று கூறியுள்ளார்.
அரை நூற்றாண்டுகளாக கட்சியில் இருந்த மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், உள்ளிட்ட பிரச்னைகளில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருடன் நாடு முழுவதும் உள்ள ஒட்டுமொத்த காங்கிரஸ் அமைப்பும் பாஜகவை எதிர்த்து போராடும் போது விலகி இருப்பது வருத்தம் அளிக்கிறது என்று அக்கட்சியினர் பலரும் தெரிவித்துள்ளனர். கலை.ரா ராகுலின் விளையாட்டே தோல்விகளுக்கு காரணம் : குலாம் நபி ஆசாத் கடும் தாக்கு!