பொதுச்செயலாளர் எடப்பாடி: தேர்தல் ஆணையத்தில் ஆவணங்கள்!

Published On:

| By Jegadeesh

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது குறித்த ஆவணங்கள் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு இமெயில் மற்றும் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியைத் தேர்வு செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜூலை 11-ல் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என்று உத்தரவிட்டது.

அதேநேரம், அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லுமா என்பதை உயர் நீதிமன்றம் தான் முடிவுசெய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதனடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டு, அதில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மட்டுமே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து, பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடைவிதிக்கக் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதற்கிடையில் நடைபெற்ற பொதுச் செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்கக் கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்றம், ஜூலை 11-ம் தேதி பொதுக்குழு கூட்டத்தில் நடத்தப்பட்ட தீர்மானங்கள் செல்லும், பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்கலாம் என்று உத்தரவிட்டது.

அதன்படி அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். மேலும் அவர் அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்று கொண்டார்.

இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் தனிநீதிபதி தள்ளுபடி செய்த மனுவை எதிர்த்து இருவர் அமர்வில் ஓ பன்னீர் செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது. இதன் மீது தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் , அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது பற்றிய விபரங்கள் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்துக்கு இமெயில் மற்றும் தபால் மூலம் ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார் என்பதை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

டிஜிட்டல் திண்ணை: அமித் ஷாவுக்கே அல்வா கொடுக்கும் எடப்பாடி

10 ஆம் வகுப்பு தேர்விலும் மாஸ் ஆப்சென்ட்? ஆசிரியர்களுக்கு உத்தரவு! தலையிடுவாரா அன்பில் மகேஷ்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share