நடிகை காயத்ரி ரகுராம் தமிழக பாஜக மாநில தலைவரை அந்தர் பல்டி அண்ணாமலை என்று விமர்சித்துள்ளார்.
தமிழக பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தலைவராக இருந்த நடிகை காயத்ரி ரகுராமிற்கும் அண்ணாமலைக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதலால் அவர் கட்சியிலிருந்து 6 மாதங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையின் கீழ் அக்கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி காயத்ரி ரகுராம் பாஜகவிலிருந்து விலகினார். இதனால் அவர் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார்.
இந்தநிலையில் பாஜக மாநில வழக்கறிஞர் பிரிவு துணை தலைவர் ஜி.எஸ்.மணி காயத்ரி ரகுராமிற்கு எதிராக சென்னை சைபர் கிரைம் காவல்துறைக்கு ஆன்லைன் வாயிலாக புகார் அளித்தார்.
அதில், “பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக நடிகை காயத்ரி ரகுராம் மிரட்டுவது, பிளாக்மெயில் செய்வது, அவதூறு பரப்புவது போன்று ட்வீட் செய்து வருகிறார். அவரது பதிவுகள் பாஜக நிர்வாகிகளிடையே மோதலை தூண்டும் வகையிலும், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படும் வகையிலும் அமைந்துள்ளது. இதனால் அவர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை கேட்டுக்கொண்டதால் வழக்கறிஞர் பிரிவு துணை தலைவர் ஜி.எஸ்.மணி காயத்ரி ரகுராமிற்கு எதிராக கொடுக்கப்பட்ட புகாரை வாபஸ் பெற்றார்.
இதுகுறித்து காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில், “அண்ணாமலை, நான் உன்னை துஷ்பிரயோகம் செய்தேன், மிரட்டுகிறேன், உன்னை பிளாக்மெயில் செய்தேன் என்று திரு ஜிஎஸ் மணி அவர்களிடம் அழுதாயா? நான் எப்போது செய்தேன்? உங்கள் நகைச்சுவை கருத்துக்களுக்காக நான் சிரித்துவிட்டு என் நகைச்சுவை கருத்துகளை தெரிவித்தேன். அவ்வளவுதான்.. ஏன் இவ்வளவு சீரியஸ் அண்ணாமலை? நீயும் சினிமா துறையைப் பற்றி பேசியுள்ளீர்கள்.. கருத்து சுதந்திரம் தானே.. கோச்சிக்க கூடாது. அந்தர் பல்டி அண்ணாமலை” என்று விமர்சித்துள்ளார்.
செல்வம்
அனுமன் ஜெயந்தி: போஸ்டர் வெளியிட்ட ‘ஆதி புருஷ்’ படக் குழு!
“ரூ.108 கோடியில் நான்கு சிட்கோ தொழிற்பேட்டைகள்”: தா.மோ.அன்பரசன்