திமுக முன்னாள் எம்.பி ரா.மோகன் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 81.
1980 ஆண்டு கோவை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராகவும் 1989 ஆம் ஆண்டில் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ரா.மோகன்.
உடல்நலக்குறைவு காரணமாக கோவையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று (டிசம்பர் 10) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.
அதில், “கோவை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ரா.மோகன் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். மாணவப் பருவத்திலேயே திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட அவர், தன்னுடைய 13 வயதிலேயே நகர்மன்றத் தேர்தலில் கையில் இருவண்ணக் கொடியேந்தி, கட்சி வேட்பாளர்களுக்காக வீதிவீதியாக வாக்கு சேகரித்தவர்.
இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் பங்கெடுத்தவர். எமர்ஜென்சிக் காலத்தில் சிறைவாசம் அனுபவித்தவர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் பேரன்பிற்குப் பாத்திரமானவர்.
கொள்கை மறவராக வாழ்ந்த ரா.மோகனுக்கு, கடந்த 15.9.2022 அன்று நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் முப்பெரும் விழாவில், “அண்ணா விருது” வழங்கி, அவரது பொதுவாழ்வைப் போற்றினேன். நான் எப்போது கோவைக்குச் சென்றாலும், ரா.மோகனைச் சந்திக்கத் தவறியதில்லை. இன்று அவர் மறைந்த வேதனை மிகுந்த செய்தியால் கலங்கி நிற்கிறேன். ரா. மோகனது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், கட்சித் தொண்டர்கள், கோவை மக்கள் என அனவருக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
சிங்காநல்லூர் முன்னாள் எம்.எல்.ஏ ரா.மோகனுக்கு சட்டப்பேரவையிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
ஜாமீன் கிடைத்தும் சிறையில் கைதிகள் : நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
டாப் 10 செய்திகள் : இரண்டாம் நாள் சட்டப்பேரவை கூட்டத்தொடர் முதல் கனமழை வரை!