ஆகஸ்ட் 18-ஆம் தேதி ராமநாதபுரத்தில் நடைபெறவுள்ள மீனவர் சங்க மாநில மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார் என்று மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (ஜூலை 25) வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்கள் நெடுந்தீவு பகுதியில் இலங்கை கடற்படையினரால் இன்று (ஜூலை 25) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவதும், தாக்கப்படுவதும் அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து பிரதமர் மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து கடிதம் மூலமாகவும் தொலைபேசி மூலமாகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகிறார்.
இருந்தபோதிலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகிறது.
முதல்வர் ஸ்டாலின் கடந்த 20.7.2023 அன்று பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், இந்தியாவிற்கு வருகை தந்த இலங்கை அதிபரிடம், இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாத்திடவும்,
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி தாக்கப்படுவதும் குறித்தும், கைது செய்யப்படுவது குறித்தும் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களது உரிமைகள் மற்றும் சுதந்திரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வது குறித்தும் இலங்கை அதிபரை வலியுறுத்திட கேட்டுக்கொண்டார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பு கொண்டு, தமிழக மீனவர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து இந்தியாவிற்கு வருகை தந்த இலங்கை அதிபரிடம் பேச வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்தநிலையில், மீனவர்களின் வாழ்வாதார பிரச்சனைகள் தொடர்பாக தமிழ்நாட்டின் அனைத்து மீனவர் சங்கங்கள் ஒன்றிணைந்து, தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவது, தாக்கப்படுவது,
அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவது போன்ற நடவடிக்கைகளை கண்டித்தும், அதனை தடுத்திட கோரியும், மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியறுத்தியும் ராமநாதபுரத்தில் ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி மாநில மாநாடு நடத்தவுள்ளது.
இம்மாநில மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
அவர்களின் அழைப்பினை ஏற்று முதலமைச்சர் ஆகஸ்ட் 18-ஆம் தேதி இராமநாதபுரத்தில் நடைபெறவுள்ள மீனவர் சங்கங்களின் மாநில மாநாட்டில் கலந்து கொள்ள இசைவு தெரிவித்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
இராமநாதபுரம் மீனவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளும் ஸ்டாலின்
IRCTC இணையதளம் முடக்கம்: ரயில்வே அட்வைஸ்!
“சிறையில் செந்தில் பாலாஜிக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்படவில்லை” – ரகுபதி
’கலவரத்தில் மாநில அரசும் ஈடுபட்டது’: மணிப்பூர் பாஜக எம்.எல்.ஏ புகாரால் பரபரப்பு!