நேட்டோவில் பின்லாந்து: அதிகரிக்கும் போர் பதற்றம்!

Published On:

| By Selvam

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போருக்கு மத்தியில் பின்லாந்து நேட்டோ அமைப்பில் இன்று (ஏப்ரல் 4) இணைய இருப்பது உலக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

உலகின் மிகப்பெரிய ராணுவக் கூட்டமைப்பு நேட்டோ ஆகும். இந்த ராணுவக் கூட்டமைப்பில் மிகப்பெரிய ராணுவ பலத்துடன் அமெரிக்கா உள்ளது.

அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, துருக்கி உட்பட 30 நாடுகள் நேட்டோ அமைப்பின் உறுப்பு நாடுகளாக உள்ளன.

இதனிடையே, உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததையடுத்து ஐரோப்பிய நாடுகள் இடையே போர் அச்சம் ஏற்பட்டது.

இதனால், ஐரோப்பிய நாடுகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தினால் அது மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் என்ற அச்சம் நிலவி வருகிறது. இந்த நிலையில், நேட்டோ அமைப்பில் பின்லாந்து இணைய உள்ளது.

இன்று நேட்டோ அமைப்பின் 31ஆவது உறுப்பு நாடாக ரஷ்யாவுடன் எல்லையை பகிரும் பின்லாந்து, நேட்டோ அமைப்பில் இணைய உள்ளது.

நேட்டோ அமைப்பில் பின்லாந்து இணைவதால் அந்த நாட்டுக்குள் நேட்டோ படைத்தளம், படைகள் குவிக்கப்படலாம். இது ரஷ்யாவுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி உக்ரைன் மீதான போரை தீவிரப்படுத்த வழிவகுக்கும்.  

பின்லாந்து இணைவது தொடர்பாக பேசியுள்ள நேட்டோவின் பொது செயலாளர் ஜென்ஸ் ஸ்டால்டன்பர்க்,

“இது ஒரு வரலாற்றுபூர்வமான வாரம். நாளை முதல் பின்லாந்து கூட்டமைப்பின் முழு நேர உறுப்பினர் ஆகிறது.

நேட்டோ தலைமையகத்தில் முதன்முறையாக  நாங்கள் பின்லாந்து கொடியை ஏற்ற இருக்கிறோம். பின்லாந்து பாதுகாப்பு, நார்டிக் பாதுகாப்பு மற்றும் நேட்டோ அமைப்பு முழுவதுக்கும் நல்ல நாளாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

பின்லாந்தை போன்று ஸ்வீடனும் நேட்டோ அமைப்பில் இணைய விண்ணப்பித்துள்ளது. ஸ்வீடன் மீதான விண்ணப்பம் இன்னும் பரீசிலனையில் உள்ள நிலையில் பின்லாந்து இன்று நேட்டோ அமைப்பில் இணைய உள்ளது.

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போருக்கு மத்தியில் பின்லாந்து நேட்டோ அமைப்பில் இணையவிருப்பது உலக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜ்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share