உறுப்பினர் சேர்க்கை: பரிசுக்கு நான் கேரண்டி!

Published On:

| By Jegadeesh

அரசியல்வாதியின் நிரந்தர சக்தி, தேர்தலில் வெற்றி பெறுவது தான் – அந்தவகையில் தோல்வி என்ற வார்த்தையே காணாத தொகுதி நம் மதுரை மத்திய தொகுதி என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

மதுரை மத்திய சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி கட்டிடத்தை நிதிஅமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று திறந்து வைத்தார்.

பின்னர் மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா, உறுப்பினர் சேர்க்கை குறித்து பகுதி வட்ட கழக கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், “எந்தவொரு இயக்கத்திற்கும் உள்ள முக்கிய திறன் தேர்தலில் வெற்றி பெறுவது தான். அரசியல் இயக்கம் என்றால் தேர்தலில் வெற்றி பெற வேண்டும்.

ஒரு அரசியல் கட்சியான நாம் நம் கொள்கை தத்துவத்தின் அடிப்படையில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து சட்டங்களை, திட்டங்களை நிதிகளை மக்களின் நலனுக்கு தீட்டி செயல்படுத்தினால் தான் மக்களிடம் வெற்றி பெற முடியும்.

தேர்தல் வெற்றி பெறுவது தான் இயக்கத்தின் வெற்றி. அரசியல் வாதியின் நிரந்தர சக்தி தேர்தலில் வெற்றி பெறுவது தான். தோல்வி என்ற வார்த்தையே காணாத தொகுதி நம் மதுரை மத்திய தொகுதி” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “2016ம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற தொகுதியில் மதுரையில் இரண்டே தொகுதிகளில் வெற்றி பெற்றோம். அதில் ஒன்று மதுரை மத்திய தொகுதி. 2019 நாடாளுமன்ற தேர்தலில் கூடுதல் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். மக்களிடம் பாசம் பிணைப்பு இருந்தால் தொடர்ந்து வெற்றி பெறுவோம்.

இன்னும் கூடுதல் வாக்காளர்களை சேர்க்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. எங்கு பலவீனமாக உள்ளோம் என்பதை கண்டறிந்து வலுப்படுத்த வேண்டும். கழகத்தின் தத்துவத்திற்கு ஏற்ப உறுப்பினர்களை சேர்ப்பது தான் சிறப்பான முயற்சி.

நம் தொகுதியின் பொறுப்பாளர் கடந்த முறை ஒரு ஆலோசனை வழங்கினார் அதன்படி சிறப்பாக செயல்படுபவர்களுக்கு எந்த பரிசை அவர் அறிவித்தாலும் அதை நிறைவேற்ற நான் தயாராக இருக்கிறேன்” என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

இராமலிங்கம்

அதிமுக பாஜகவிற்கு அடிமை என்றால் திமுக கொத்தடிமை: சீமான்

குஜராத் அணியின் ஹாட்ரிக் வெற்றியை தடுக்குமா கேகேஆர்!