ஜெயங்கொண்டம் சிப்காட் தொழிற்பேட்டைக்கும், அதில் அமைக்கப்பட உள்ள புதிய காலணி தொழிற்சாலைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (நவம்பர் 15) அடிக்கல் நாட்டினார்.
கோவை, விருதுநகரை தொடர்ந்து அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கள ஆய்வு மேற்கொள்கிறார்.
இதற்காக அவர் நேற்று இரவு ஜெயங்கொண்டத்திற்கு வருகை தந்தார். அங்கு அவருக்கு திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் அங்குள்ள பயணிகள் விடுதியில் தங்கினார்.
இந்த நிலையில் இன்று காலையில் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மகிமைபுரத்தில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டைக்கு ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
மேலும் சுமார் 130 ஏக்கரில் ரூ.1,000 கோடி முதலீட்டில் 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் அமைய உள்ள தைவான் நாட்டை சேர்ந்த டீன் ஷூஸ் குழுமத்தின் (Dean shoes group) புதிய காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கும் அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் கே.என்.நேரு, எ.வ.வேலு, சிவசங்கர் மற்றும் டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்ட அமைச்சர்களும், டீன் ஷூஸ் துணைத் தலைவர் ஓட்டோ யங் ஆகியோரும் பங்கேற்றனர்.
முன்னதாக வேனில் ரோடு ஷோ வந்த ஸ்டாலின் ஜெயங்கொண்டத்தில் கலைஞர் சிலையை திறந்து வைத்தார்.
தொடர்ந்து அரியலூர் மாவட்டம், கொல்லாபுரத்தில் நடைபெறும் அரசு விழாவில், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ரூ.120 கோடி மதிப்பிலான 53 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.88 கோடியில் 507 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, ரூ.174 கோடியில் 21,862 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்ற உள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பெளர்ணமி தினத்தில் ஏறிய தங்கம் விலை : சவரன் எவ்வளவு தெரியுமா?