விருமன் படத்தில் இடம்பெற்ற, ’கஞ்சா பூ கண்ணால’ என்ற பாடலை வைத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுகவை விமர்ச்சித்துள்ளார்.
முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி சங்கர் நடிப்பில் விருமன் படம் உலகமெங்கும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியானது.
இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படம் வெளியாவதற்கு முன்பே படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்தது.
அதிலும் குறிப்பாக ”கஞ்சா பூ கண்ணால” என்ற பாடல் இளைஞர்களின் ஃபேவரைட் ஆக மாறிவிட்டது.
என்னதான் அனைவரது விருப்பத்தை அப்பாடல் பெற்றாலும் சிலரது விமர்சனங்களையும் பெற்று வருகிறது.
அதிலும் குறிப்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அப்பாடலை எடுத்துக்காட்டி திமுகவை விமர்சித்து ட்விட் செய்துள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளது, ”தமிழ்நாட்டில் ஏற்கனவே திரும்பிய திசையெல்லாம் கஞ்சா தடையில்லாமல் கிடைக்கிறது. அதை தடுக்க திமுக அரசுக்கு திராணியும் இல்லை, போதாக்குறைக்கு கஞ்சா பூ கண்ணாலே-னு பாட்டு வேற” என்று குறிப்பிட்டுள்ளார்,
இதனை தொடர்ந்து ஜெயக்குமாரின் இந்த ட்விட்டர் பதிவை ஒரு சிலர், ”உவமையை புரிந்துக் கொள்ள முடியாதவர்கள் எல்லாம் எப்படி அமைச்சரானார்கள்” என்று கேலி செய்தும் வருகின்றனர்.
கஞ்சாவை விற்கக் கூடாது என்று போலீஸார் தடை செய்திருக்கிறார்கள். போதைப் பொருட்களை தடை செய்ய நான் சர்வாதிகாரியாக மாறவும் தயங்கமாட்டேன் என்று எச்சரித்திருக்கிறார். இந்த நிலையில் சினிமா பாடல்களில் கஞ்சா என்பது தொடர்ந்து தடையில்லாமல் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
’கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு… கண்டாலே கிறுக்கேத்தும் கஞ்சா வச்ச கண்ணு’ என 2014 அதிமுக ஆட்சியில் வெளிவந்த ஜில்லா படத்தில் விஜய் பாடினார். இப்போது திமுக ஆட்சியில், ‘கஞ்சா பூ கண்ணாலே’ என்று கார்த்தி பாட்டு பாடுகிறார்.
அதிமுக, திமுக என இரு ஆட்சிகளிலும் சினிமா பாடல்களில் கஞ்சாவிற்குக் குறைவில்லை என்பதே நிஜம்.
மோனிஷா
வங்கிக் கொள்ளை: பொதுமக்களுக்கும் ரூ.1 லட்சம் பரிசு- போன் பண்ணுங்கள்: டிஜிபி சைலேந்திரபாபு