முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா திடீரென மருத்துவமனையில் இன்று மாலை (ஆகஸ்ட் 30) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா. ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அரசியலில் நுழைந்து திடீர் பரபரப்பை ஏற்படுத்திய இவர், தனது கணவர் மாதவனுடன் தற்போது தி.நகரில் வசித்துவருகிறார்.
இதற்கிடையே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு குடும்பத்தில் மோதல் உருவானதாக தகவல் வெளியானது.
இந்த பிரச்சனை தொடர்பாக தனது வாட்ஸ் ஆப் செயலியில், குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தொடர்ந்து தனது கணவர் மாதவன் தன்னை பிரிந்துவிடுவதாகக்கூறி துன்புறுத்துவதாகவும் ஸ்டேட்டஸ் வைத்து, பின்னர் அழித்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாதவன் கூறுகையில், ”தீபாவின் உடல்நிலை குறித்து எனக்கு முழு அக்கறை உள்ளது. நான் தான் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பார்த்து கொள்கிறேன்.
மருந்தின் தாக்கம் அவரிடத்தில் உள்ளது. சராசரியாக எல்லா வீடுகளிலும் நடக்கும் குடும்பதகராறு தான். அவர் ஏதோ கோபத்தில் வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் போட்டுள்ளார்.
அவர் மீது எள்ளளவும் மாறாத அன்பும் பிரியமும் வைத்துள்ளேன் . அவரை விவாகரத்து செய்யும் எண்ணமும் இல்லை. அதற்கான அவசியமும் இல்லை. இதுவும் கடந்து போகும்.” என்றார்.

இந்நிலையில், கணவன் மாதவனுடன் தீபாவுக்கு மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதல் உருவானதாக சொல்லப்படுகிறது.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் தீபா உடல் மற்றும் மன ரீதியாக பாதிக்கப்பட்டு தற்போது சென்னையில் உள்ள மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, தீபா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் அவரது நெருங்கிய வட்டாரத்தில் உறுதிபடுத்தப்படாத தகவல் உலா வருகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
ஜெ.தீபாவிடம் விவாகரத்து கேட்கிறேனா?: கணவர் மாதவன் விளக்கம்!