அமெரிக்கா சென்றாலும் கட்சி பணிகளை கவனித்துக்கொண்டே இருப்பேன் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தலைமையில் இன்று (ஆகஸ்ட் 16) சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
அப்போது, கலைஞர் நாணயம் வெளியிடுவதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தும், தமிழகத்தை வஞ்சிப்பதாக பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், “ மக்களவை தேர்தல் வெற்றி சாதாரண வெற்றி இல்லை; சாதாரணமாகவும் இது கிடைத்துவிடவில்லை. 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நாற்பதுக்கு 39 பெற்றோம். 2024 தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது பெற்றோம். இரண்டு தேர்தலில் முழுமையான வெற்றியை இதுவரை யாரும் பெற்றது இல்லை; நாமும் இதுக்கு முன்பு பெற்றது இல்லை! இந்த வெற்றிக்கு உங்களது உழைப்பு, செயல்பாடு மிக மிக அடிப்படையாக அமைந்திருந்தது.
நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியை ஆவணப்படுத்தி, ‘தென் திசையின் தீர்ப்பு’ என்ற நூலை உருவாக்கி வழங்கியிருக்கிறேன்.
நமது உழைப்பையும் வெற்றியையும் பதிவு செய்யும் ஆவணங்கள் அதிகம் இல்லை. அதனால்தான் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நம்முடைய எல்லா செயல்பாடுகளையும் இந்த நூலில் முழுமையாக தொகுத்து வழங்கி இருக்கிறேன்.
உங்கள் மாவட்டங்களில் இயங்கும் கட்சி சார்ந்த நூலகங்களிலும் – பொது நூலகங்களிலும் இந்த புத்தகத்தை நீங்கள் கொண்டு சேர்க்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
மேலும் அவர், “2019 நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கி, நடந்த முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வரை தொடர்ச்சியாக மக்கள் மன்றத்தில் வென்றிருக்கிறோம். சுணக்கமில்லாமல் செயல்பட்டால், அடுத்த முறையும் திமுக ஆட்சி என்பதில் சந்தேகமில்லை.
அதற்கு தயாராகும் வகையில்,களப்பணிகளை தொடங்க வேண்டும். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தேர்தலை மனதில் வைத்தே செயல்பட வேண்டும். விமர்சனங்களுக்கு பதில் சொல்லும் அதேவேளையில் நம்முடைய சாதனைகளையும் மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்க வேண்டும்.
2026 சட்டமன்றத் தேர்தலில் நம்முடைய இலக்கு 200 தொகுதிகள் என்று நான் சும்மா ஏதோ மேடைப் பேச்சுக்காக குறிப்பிடவில்லை. அந்த அளவுக்கு நலத்திட்டப் பணிகளை செய்திருக்கிறோம். மக்களிடம் நற்பெயரை வாங்கியிருக்கிறோம்.
தமிழ்நாட்டின் எந்த ஒரு வீட்டை எடுத்துக் கொண்டாலும் அந்த வீட்டில் ஒருவராவது பயனடையும் வகையில்தான் திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மக்களை சென்று சேர்ந்திருக்கும் நலத்திட்டங்கள் எல்லாம் வாக்குகளாக மாற வேண்டும் என்றால் அதற்கு களப்பணி மிக மிக அவசியம். அதற்கு இப்போதே நாம் உழைக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
அமெரிக்க பயணம் குறித்து பேசிய ஸ்டாலின், “நான் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வரும் 27ஆம் தேதி இரவு அமெரிக்காவிற்குப் புறப்பட இருக்கிறேன். தீர்மானத்தில் சொன்னபடி, முப்பெரும் விழாவிற்கான பணிகளை செய்து முடிப்பதோடு – நான் இப்போது சொல்லியிருக்கும் பணிகளையும் செய்ய தொடங்கியிருக்க வேண்டும். நான் அமெரிக்காவில் இருந்தாலும் தலைமைக் கழகம் மூலமாக இதையெல்லாம் கவனித்துக் கொண்டுதான் இருப்பேன்.
நாளை மறுநாள் கலைஞர் உருவம் பொறித்த நூறு ரூபாய் நாணயம் வெளியிடப்பட இருக்கிறது. அதில் நீங்கள் எல்லாரும் கலந்து கொள்ள வேண்டும்.
உலகத்தில் எந்த தலைவருக்கும் இப்படி சிறப்புகள் செய்யப்பட்டது இல்லை என்ற அளவிற்கு கொண்டாடி இருக்கிறோம். இதன் தொடர்ச்சியாக, வரும் முப்பெரும் விழாவில் கட்சியின் பவள விழா நிறைவையும் தீர்மானத்தில் சொன்னபடி மிகச்சிறப்பாக நடைபெற வேண்டும்.
கட்சி தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்தியாவிலேயே முதன்முதலாக ஒரு மாநிலக் கட்சி ஆட்சியை பிடித்த வரலாறு தமிழ்நாட்டுக்குத்தான் சொந்தம்! அந்த வரலாற்றை எழுதியது நாம்தான்!
கட்சி தொடங்கி 75 ஆண்டுகள் ஆனபிறகும் ஆட்சியில் இருக்கும் இயக்கமும் நம்முடையதுதான். அப்படிப்பட்ட தருணத்தில் – கோடிக்கணக்கான தொண்டர்கள் இருக்கும் இந்த இயக்கத்தில், நானும் நீங்களும் பல்வேறு கட்சிப் பொறுப்புகளில் இருக்கிறோம் என்பது நமக்கெல்லாம் கிடைத்த மிகப்பெரிய பெருமை.
75 ஆண்டுகள் கடந்துவிட்ட இந்த இயக்கத்தின் தேவை இன்னும் நூறு ஆண்டுகளுக்கு இருக்கிறது. ஆலமரமாக இந்த இயக்கம் வேரூன்றி நிற்கிறது என்றால், அதற்கு காரணம், இந்த இயக்கத்தின் வளர்ச்சிக்கு, கோடிக்கணக்கானவர்களின் உழைப்பும் – தியாகமும் உரமாக்கப்பட்டிருக்கிறது.
அதன் பயனைத்தான் இன்றைக்கு நாம் அனுபவிக்கிறோம். அதேமாதிரி, இந்த இயக்கத்தை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு சேர்க்க வேண்டிய வரலாற்றுக் கடமையும் நம்முடைய கைகளில் இருக்கிறது” என்று மா.செ.க்களிடம் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதித்தது என்ன? – ஆர்.எஸ்.பாரதி பேட்டி!
Share Market : வாரத்தின் கடைசி நாள்… ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை!