அறப்போர் இயக்கத்துக்கு எதிராக ரூ.1.10 கோடி மான நஷ்ட ஈடு கோரி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கை இன்று (செப்டம்பர் 2)விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
அதிமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஒதுக்கீட்டில் அரசுக்கு 692 கோடி இழப்பு ஏற்படுத்தி முறைகேடு செய்ததாக,
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது தலைமைச் செயலாளர், நெடுஞ்சாலை துறை, லஞ்ச ஒழிப்புத்துறை ஆகியோரிடம் அறப்போர் இயக்கத்தின் சார்பில்,
கடந்த ஜூலை 22ஆம்தேதி புகார் அளிக்கப்பட்டது. மேலும் அதுகுறித்த செய்தியை தனது சமூகவலைத்தளங்களிலும் அறப்போர் இயக்கம் வெளியிட்டிருந்தது.
அறப்போர் இயக்கத்தின் இந்த செயல் தனது பெயருக்கு அவப்பெயர் மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக கூறி, இதற்கு மான நஷ்ட ஈடாக ரூ.1.10 கோடி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “ எதன் அடிப்படையில் டெண்டர் ஒதுக்குவது என்பது அரசின் கொள்கை முடிவு.
இதில் அறப்போர் இயக்கம் தலையிட முடியாது. எனவே மான நஷ்ட ஈடாக ரூ. 1.10 கோடி வழங்க வேண்டும்” என வாதிட்டார்.
தொடர்ந்து அறப்போர் இயக்கம் சார்பில், “ஆதாரங்களின் அடிப்படையிலேயே எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது.
லஞ்ச ஒழிப்பு துறையில் அளித்த புகாரை தான் நாங்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டோம்.
மேலும் எடப்பாடி பழனிசாமி குறித்து தனிப்பட்ட முறையில் எந்த குற்றச்சாட்டும் கூறவில்லை .
டெண்டர் குறித்து முக்கிய கொள்கை முடிவுகளை எடுத்ததில் எடப்பாடி பழனிச்சாமி இதற்கு பொறுப்பேற்க வேண்டும்” என்றும் அறப்போர் இயக்கம் சார்பில் வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, திங்கட்கிழமைக்குள் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய இருதரப்புக்கும் உத்தரவிட்டு, வழக்கினுடைய தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
–கிறிஸ்டோபர் ஜெமா