ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
Election commission notice to Rahul Gandhi
தேர்தல் பிரச்சாரத்தில் பிக்பாக்கெட், பீடை என்று பேசியது தொடர்பாக ராகுல்காந்தி பதிலளிக்க கோரி தேர்தல் ஆணையம் இன்று (நவம்பர் 23) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தல் பரப்புரை இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் பார்மரில் நடந்த இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி பிக்பாக்கெட்காரன் கதையை கூறினார்.
மூன்று பிக்பாக்கெட்காரர்கள்!
அவர், “பிக்பாக்கெட்காரர்கள் தனியாக வருவதில்லை, மூன்று பேர் சேர்ந்து வருவார்கள். மக்கள் முன்னால் இருந்து வித்தைக்காட்டி கவனத்தை திசைதிருப்ப, பின்னால் இருந்து ஒருவர் மற்றும் தூரத்தில் இருந்து இன்னொருவர் என பிக்பாக்கெட் அடிப்பார்கள்.
அதேபோன்று, உங்கள் கவனத்தை திசை திருப்புவதுதான் பிரதமர் நரேந்திர மோடியின் வேலை. அவர் முன்னால் இருந்து தொலைக்காட்சியில் வந்து இந்து-முஸ்லிம், பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற தலைப்புகளை எழுப்பி பொதுமக்களை திசை திருப்புகிறார். இதற்கிடையில், பின்னால் இருந்து அதானி பணத்தை கொள்ளையடிக்க, தேவைப்படும்போது அமித்ஷா மிரட்டுகிறார்” என்று பேசினார்.
பீடையால் தோற்றார்கள்!
முன்னதாக கடந்த 21ஆம் தேதி ஜெய்ப்பூரில் பேசிய ராகுல்காந்தி “நமது வீரர்கள் உலகக் கோப்பையை வென்றிருப்பார்கள். ஆனால் ஒரு பீடையால்(பனாட்டி) அவர்கள் தோற்றார்கள். டிவி சேனல்கள் இதைச் சொல்லாது, ஆனால் பொதுமக்களுக்குத் தெரியும்” என்று அவர் கூறியிருந்தார்.
ராகுல்காந்தி யாருடைய பெயரையும் அப்போது பயன்படுத்தாத நிலையில், மோடியை தான் பீடை என்று குறிப்பிட்டு பேசியதாக பாஜகவினர் ராகுல்காந்தியை குற்றச்சாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக புகார் மனு!
ராகுல்காந்தியின் இந்த பேச்சுக்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதுதொடர்பாக பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்திலும் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அதில், “பிரதமர் மோடியை ‘பனாட்டி’ (பீடை) என்ற அவதூறு வார்த்தையால் குறிப்பிட்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி தோற்றதற்கு பிரதமர் மோடிதான் காரணம் என்ற பொருளில் ராகுல்காந்தி பேசினார்.
மேலும் ஒரு பிரதமரை பிக்பாக்கெட் உடன் ஒப்பிடுவதும், ‘பனௌட்டி’ என்ற வார்த்தையை பயன்படுத்துவதும் தேசிய அரசியல் கட்சியின் மூத்த தலைவருக்கு பொருத்தமற்றது.
எந்த நபரையும் பிக்பாக்கெட் என்று அழைப்பது அவரது நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் விதமாக நபரின் குணாதிசயத்தை படுகொலை செய்வதாகும்” என, பா.ஜகவினர் அளித்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பதிலளிக்க உத்தரவு!
இதனை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம், வரும் நவம்பர் 25ஆம் தேதி மாலை 6 மணிக்குள் அதாவது அடுத்த 2 நாட்களுக்குள் தான் பேசியது குறித்து விளக்கமளிக்க ராகுல்காந்திக்கு நோட்டீஸ் அனுப்பி இன்று உத்தரவிட்டுள்ளது. Election commission notice to Rahul Gandhi
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
’தா.மா.கா எந்த கூட்டணியில் உள்ளது?’: ஜி.கே.வாசன் பதில்!
ஐபிஎல் தொடரிலிருந்து பென் ஸ்டோக்ஸ் விலகல்… CSK அணிக்கு பின்னடைவா?