அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு தமிழக அரசு தனியார் ஏஜென்சி மூலம் பணியாட்களை தேர்ந்தெடுக்க ஒப்பந்த புள்ளி கோரியுள்ள முடிவை கைவிட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
தமிழக போக்குவரத்து துறையில் 117 நடத்துனர்கள், 117 ஓட்டுநர்களை ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்ய போக்குவரத்து துறை ஒப்பந்தம் கோரியுள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மகளிருக்கு கட்டணம் இல்லா பயணம் என்று அறிவிக்கப்பட்டு, குறைந்த அளவு பழைய, பழுதடையக்கூடிய நிலையில் உள்ள பேருந்துகளையே இயக்குவதால் நகரப் பகுதிகளில் மகளிர் தங்களது தினசரி வேலைக்குச் செல்லும் நேரத்தை ஒரு மணி நேரம் முன்னதாகவே துவங்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
30.9.2023 அன்றைய தேதி வரை, கருணை அடிப்படையில் பணி கோரி பதிவு செய்துள்ள வாரிசுகளின் எண்ணிக்கை சுமார் 1,087. மேலும், போக்குவரத்துக் கழகங்களுக்கு ஒட்டுநர் மற்றும் நடத்துனர் தேர்வுக்கு விளம்பரம் செய்து 18.09.2023 அன்று, வரை ஆன்லைன் மூலம் லட்சக்கணக்கில் ஒட்டுநர் மற்றும் நடத்துனர்கள் பணிக்கு விண்ணப்பித்து உள்ளனர். இதன்மூலம் ஒட்டுநர், நடத்துனர்களை தேர்ந்தெடுக்காமல், தற்போது, தனியார் ஏஜென்சி மூலம் ஒட்டுநர், நடத்துனர்களை தேர்ந்தெடுக்க முயலும் திமுக அரசிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஏற்கனவே, கடந்த ஜூலை மாதம் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் தனியார் ஊழியர்களை அமர்த்த முயற்சித்த திமுக அரசை எதிர்த்து அனைத்து போக்குவரத்து சங்கங்களும் ஆர்ப்பாட்டம் செய்தன. நானும், திமுக அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்து, நேரடியாகத் தொழிலாளர்களை நியமிக்க வலியுறுத்தினேன்.
ஆனால், தொழிலாளர் துரோக திமுக அரசு, அனைவரது எதிர்ப்பையும் மீறி சுமார் 538 பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமித்தது. இந்த விஷயத்தில், ‘திமுக-வின் கூட்டணிக் கட்சிகள் வாய்மூடி மவுனம் காக்கின்றன. ஏற்கெனவே, கடந்த ஜூலையில் 538 தொழிலாளர்களை ஒப்பந்த அடைப்படையில், நியமித்துவிட்டோம். எனவே, தைரியமாக இனி அரசு போக்குவரத்துக் கழகங்களை ‘தனியார்மயமாக்கலாம் என்று இரண்டாம் கட்டமாக 30.09.2023 அன்று 117 ஓட்டுநர்களையும், 117 நடத்துனர்களையும் தனியார் ஏஜென்சி மூலம் நியமிக்க ஒப்பந்தப் புள்ளி கோரியுள்ளது இந்தத் தொழிலாளர் விரோத விடியா திமுக அரசு.
இதன்படி, போக்குவரத்துத் துறைக்கு தனியார் ஏஜென்சி மூலம் ஒப்பந்த அடிப்படையில் ஒட்டுநர், நடத்துனர்கள் நியமிக்கப்பட்டால்
எதற்கெடுத்தாலும் சமூக நீதி, சமூக நீதி என்று பொய் முகமூடி அணிந்து நடமாடும் ஸ்டாலினின் திமுக ஆட்சியில் அரசு போக்குவரத்துத் துறையில் இனி Rule of Reservation-ஐ கடைபிடிக்க முடியாது;
போக்குவரத்துத் தொழிலாளர் நலன் இனி பேணி காக்கப்படாது. போக்குவரத்துத் துறையில் 8 மணி நேர வேலை கடைபிடிக்க முடியாது. தொழிலாளர்களுக்கு பண்டிகை விடுமுறை, வார ஓய்வு கிடைக்காது.
இனி தொழிலாளர்களுக்கு பஞ்சப்படியும், வருடாந்திர ஊதிய உயர்வும் கிடைக்கா நிலை ஏற்படும்.
அரசு போக்குவரத்துத் துறையில் இனி தொழிலாளர் சட்டம் மற்றும் தொழிலாளர் நலன் பல பலன்கள் கிடைக்காத நிலை ஏற்படும்.
எனவே, அரசு போக்குவரத்துக் கழகங்களை தனியார் மயமாக்கத் துடிக்கும் திமுக அரசு, உடனடியாக ஒப்பந்தப் புள்ளியை ரத்து செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
காந்தி நினைவிடத்தில் மோடி மரியாதை!
கலையரங்கம், மானியம், விருது: கோரிக்கைகள் வைத்துள்ள தயாரிப்பாளர்கள் சங்கம்!