முதல்வர் ஸ்டாலின் காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்கி சட்டப்படி செயல்பட அனுமதிக்க வேண்டுமென்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். காவல்துறைக்கு தி. மு. க அரசு முழு சுதந்திரம் வழங்க மறுப்பதாகவும், காவலர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்க அ. தி. மு. க அரசில் செயல்படுத்தப்பட்ட காவலர் மறுவாழ்வு திட்டத்தை திமுக அரசு மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் காவலர்களை சுதந்திரமாக செயல்பட முதல்வர் ஸ்டாலின் அனுமதிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“திமுகவின் அலங்கோல ஆட்சியில் எங்கெங்கு காணினும் குற்ற செயல்களாக இருப்பது வெட்கித் தலைகுனிய வைக்கிறது.
ஒரு மாநிலத்தில் அங்கொன்றும் இங்கொன்றும் குற்றங்கள் நடப்பது இயற்கை. மாநிலம் முழுவதும் குற்ற பூமியாக காட்சியளிப்பதும், அத்தகைய அராஜகங்களில் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களும் ஈடுபடுவது என்பது தமிழகத்தில் நடக்கும் விந்தையாகும்.
கடந்த சில நாட்களாக செய்தி ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் வெடிகுண்டு மற்றும் பெட்ரோல் குண்டு வீச்சு கத்தியால் வெட்டிக்கொலை;
செல்போனுக்காக ஒடும் ரயிலில் பெண்ணை தள்ளிக் கொலை, சாலையில் செல்லும் பெண்களிடம் நகை வழிப்பறி என்று தொடர்ந்து பல நிகழ்வுகள் தமிழகத்தில் பல இடங்களில் நடந்தேறி வருகிறது.
இதன் காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பின்மை கருதி வெளியில் செல்ல அச்சமடைந்துள்ளனர். தொடர்ந்து, தமிழகத்தில் இதுபோன்ற அராஜகமான நிகழ்வுகள் அதிகளவில் நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து, திமுக அரசு பதவியேற்ற இந்த 26 மாதங்களாக தமிழகத்தில், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, போதைப் பொருள் விற்பனை,
முதியவர்கள் குறிவைத்து தாக்கப்படுதல் போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது என்று பேட்டியின் வாயிலாகவும், அறிக்கைகளின் வாயிலாகவும், சட்டமன்றத்திலும் நான் எடுத்து வைத்து, வருகிறேன்.
எனினும், திமுக அரசு பதவியேற்றது முதல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை. மக்களைக் காப்பாற்ற துப்பு இல்லாமல், சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வக்கில்லாமல், காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர்,
இனியாவது காவல் துறையை தனது ஏவல் துறையாக பயன்படுத்தாமல், அதிமுக அரசில் எப்படி காவல் துறை சட்டப்படி, சுதந்திரமாக செயல்பட்டதோ, அதுபோல் காவல் துறைக்கு முழு சுதந்திரம் வழங்கி, சட்டப்படி செயல்பட அனுமதிக்க வேண்டுமென்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை!
அன்று கலைஞர் இன்று ஸ்டாலின்: அரை நூற்றாண்டாக தொடரும் ஆளுநர் எதிர்ப்பு!