2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை விட 2024 தேர்தலில் அதிமுக வாக்கு சதவிகிதம் அதிகரித்துள்ளது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூன் 8) தெரிவித்துள்ளார்.
சேலம் ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் தேர்தல் முடிவுகள் குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை விட 2024-ஆம் ஆண்டு தேர்தலில் ஒரு சதவிகிதம் வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளோம். இது அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி.
வாக்கு சதவிகிதத்தை பொறுத்தவரை பாஜக தமிழகத்தில் வளர்ந்துவிட்டதை போல பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது.
2014-ஆம் ஆண்டு தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்பட்டது. அந்த கூட்டணி 18.80% வாக்குகள் பெற்றார்கள். 2024-ஆம் ஆண்டு இந்த தேர்தலில் அந்த கூட்டணி பெற்ற வாக்கு சதவிகிதம் 18.28% . ஆகவே, 2014 தேர்தலை காட்டிலும் 0.62% வாக்குகள் குறைவாக பெற்றுள்ளனர். எனவே, தமிழகத்தில் பாஜக அதிக வாக்கு சதவிகிதம் பெற்றதாக ஊடகங்களில் செய்தி வெளியாவது வருத்தமளிக்கிறது.
2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக தனியாக 33.52% வாக்குகள் பெற்றது. ஆனால், 2024 தேர்தலில் 26.93% வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது. 6.51% வாக்குகள் குறைந்துள்ளது.
2019 தேர்தலில் திமுக கூட்டணி பெற்ற வாக்கு சதவிகிதம் 53.29% . 2024 தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி பெற்ற வாக்கு சதவிகிதம் 46.97%. கடந்த தேர்தலை விட 6.32% வாக்குகள் குறைந்துள்ளது. இதனை ஒப்பிட்டு பார்க்கும் போது தமிழகத்தில் அதிமுக வாக்கு சதவிகிதம் மட்டும் தான் அதிகரித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
‘ரயில்’ ஆக மாறிய ‘வடக்கன்’: ரிலீஸ் எப்போது?
Gold Rate: சட்டென குறைந்த தங்கம், வெள்ளி விலை… எவ்வளவு தெரியுமா?