டெம்ப்ரவரி பதவியில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி திமுகவை விமர்சிப்பதற்கு தகுதியே இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருக்கிறார்.
மதுரையில் அமைச்சர் மூர்த்தி இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் இன்று (செப்டம்பர் 9) கலந்துகொண்டார். அப்போது மேடையில் பேசிய அவர்,
மக்களுக்கு நம்பிக்கை
போகிற வழியெல்லாம் மக்கள் எனக்கு மிகுந்த வரவேற்பு தருகிறார்கள். வரவேற்பு மட்டுமல்லாமல் கோரிக்கை மனுவையும் அளிக்கிறார்கள்.
அதை நிறைவேற்றித் தருவேன் என்ற நம்பிக்கை அவர்களிடம் அதிகம் உள்ளது. உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் ஆட்சிக்கு வருவதற்கு முன் மக்களை சந்தித்து குறைகளை கேட்டு, ஆட்சிக்கு வந்தபிறகு அதில் 70 சதவீதம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.
பல திட்டங்கள்
தற்போது உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற பெயரில் அதற்கென்று தனியாக துறை தொடங்கப்பட்டு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் செயல்பட்டு கொண்டிருக்கிறது.
மதுரையை பொறுத்தவரை கலைஞர் பெயரில் நூலகம் திறக்கப்பட இருக்கிறது. அதேபோன்று தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு அரங்கமும், மதுரை எல்லையில் கீழடி பண்பாட்டு அரங்கமும் அமையப்போகிறது.
மதுரையைச் சுற்றி சுற்றுவட்டார சாலை, பாதாள சாக்கடைப்பணி என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மினிட் டூ மினிட் சி.எம்
நான் எம்.எம்.(MM-மினிட் டூ மினிட்) சி.எம் ஆக இருக்க விரும்புகிறேன். ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்காமல் மக்களுக்காக பாடுபட்டு தமிழகத்தை முதலிடத்தில் கொண்டு செல்ல விரும்புகிறேன்.
எடப்பாடி காமெடி செய்கிறார்
திமுக எம்.எல்.ஏக்கள் என்னுடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி காமெடி செய்து கொண்டிருக்கிறார்.
அவருடைய கட்சி எம்.எல்.ஏ-க்களே அவருடன் பேசுவதில்லை. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி என அனைத்து தேர்தல்களிலும் தோல்வியடைந்திருக்கிறார்கள்.
டெம்ப்ரவரி தான்
அதிமுகவே ஈபிஎஸ் – ஓபிஎஸ் அணி இரண்டாகப் பிளவுபட்டு இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி இருப்பதே டெம்ப்ரவரி பதவியில் தான்.
அதை வைத்துக்கொண்டு அவர் திமுகவை விமர்சிப்பதற்கு தகுதியே இல்லை. நானும் இந்த நாட்டில் உயிரோடு இருக்கிறேன் என்பதை காட்டிக் கொள்ளவே சில காமெடி கதைகளை சொல்லிக் கொண்டு இருக்கிறார்.
திட்டமிட்டு செய்யக்கூடிய பொய் பிரச்சாரங்களை பற்றி நான் கவலைப்படுவதில்லை. மக்களுக்கு நன்மை செய்ய வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள், அதை மட்டுமே செய்வோம்” என்றார்.
கலை.ரா
நெல்லைக்கு முதல்வர் அறிவித்த திட்டங்கள் என்னென்ன?