சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மனித சங்கிலி போராட்டம் அறிவித்துள்ளார்.
சென்னையில் கடந்த 2022ஆம் சொத்துவரி 150 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த வாரம் நடந்த சென்னை மாநகராட்சி கூட்டத்தில் 6 சதவிகிதம் வரை சொத்துவரியை உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது மனித சங்கிலி போராட்டம் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (அக்டோபர் 2) வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஸ்டாலினின் திமுக அரசு கடந்த 40 மாதகால ஆட்சியில்; மூன்று முறை மின்கட்டண உயர்வுடன், இனி ஆண்டுதோறும் மின் கட்டணம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு,பத்திரப் பதிவு கட்டணங்கள் உட்பட அரசின் அனைத்துக் கட்டணங்களும் பல மடங்கு உயர்வு; பால் பொருட்கள் விலை பலமுறை உயர்வு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு; நியாய விலைக் கடைகளில் குறித்த நேரத்தில் பொருட்கள் வழங்கப்படாமை;
கொலை, கொள்ளை என்று தொடர்ந்து சட்டம்-ஒழுங்கு சீர்கேடு; பெண்கள், சிறுமியருக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகள்; போதைப் பொருட்களின் கேந்திரமாக மாறிய தமிழகம்; சென்னை மாநகராட்சியில், மயான பூமியை தனியார் மயமாக்கும் முடிவு,ஏற்கெனவே உயர்த்தப்பட்ட 100 சதவீதம் மற்றும் 150 சதவீதம் சொத்து வரி உயர்வுடன் இனி ஆண்டுதோறும் 6 சதவீதம் சொத்து வரி கட்டணம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு; இதனால் குடிநீர் மற்றும் கழிவு நீர் இணைப்புக் கட்டணங்கள் ஆண்டு தோறும் உயர்த்தப்படும் நிலை;என்று தமிழக மக்களின் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக சீரழித்து வருகிறது.
ஸ்டாலினின் திமுக ஆட்சியில், மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல் இதுவரை இல்லாத வகையில் ஆண்டுதோறும் 6 சதவீத சொத்து வரி உயர்வு என்ற பேரிடி மக்கள் தலையில் சுமத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அடித்தள மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும்.
40 மாத காலமாக, மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதற்குக் காரணமான ஸ்டாலினின் திமுக அரசைக் கண்டித்தும்; மக்கள் நலன் கருதி, உயர்த்தப்பட்ட சொத்து வரியை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் அதிமுக சார்பில், அக்டோபார் 8 காலை 10.30 மணியளவில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளுக்கு உட்பட்ட வட்டங்களிலும்; நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளிலும், மனித சங்கிலிப் போராட்டம் நடைபெறும்” என்று அறிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
எப்போதுமே எளிமையான உணவுதான்… ஞாயிற்றுக்கிழமை மட்டும் இட்லியாம்!- முகேஷ் அம்பானியின் உணவு ரகசியம்!
“மது ஒழிப்பு மாநாட்டிற்கு விசிகவினரின் ஆதரவே இல்லை”: தமிழிசை சௌந்தரராஜன்