சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.
கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட எடப்பாடி பழனிசாமி தேர்தல் வேட்புமனு மற்றும் பிரமாண பத்திரத்தில் சொத்து விவரங்கள் உள்பட பல்வேறு தவறான தகவல்களை தெரிவித்துள்ளதாகவும் இதனால் அவர் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் மிலானி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சேலம் மாவட்ட நீதிமன்றம் வழக்கில் முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சேலம் மத்திய குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டது.
சேலம் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்க கோரியும் அதுவரை இந்த வழக்கை காவல்துறை பெரிதுபடுத்த வேண்டாம் எனவும் உத்தரவிட்டது.
இந்தநிலையில் சேலம் மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் புஷ்பராணி, உதவி ஆய்வாளர் குணசேகர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மீறி சேலத்தில் உள்ள இந்தியன் வங்கியில் தனது கணக்கு குறித்த விவரங்களை கேட்டுள்ளனர். ஈரோட்டில் தான் படித்த ஸ்ரீவாசவி கல்லூரிக்கு கடிதம் எழுதியுள்ளனர். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக செயல்பட்ட அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன் இரண்டு காவல்துறை அதிகாரிகளும் ஜூலை 7-ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.
செல்வம்