“ஜனநாயக அடிப்படையில் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்”: எடப்பாடி

பிறப்பின் அடிப்படையில் தலைமை தீர்மானிக்காமல் ஜனநாயக அடிப்படையில் தலைமையை தேர்ந்தெடுத்து ஜனநாயக மாண்புகளை காத்து நிற்கும் கழகத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்றிருப்பதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி கடந்த மார்ச் 28-ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அவருக்கு தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றிகள் தெரிவித்து எடப்பாடி பழனிசாமி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்‌ திண்ணியர்‌ ஆகப்‌ பெறின்‌” என்ற குறளுக்கேற்ப புரட்சித்‌ தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌. அவர்களால்‌. தோற்றுவிக்கப்பட்டு, புரட்சித்‌ தலைவி அம்மா அவர்கள்‌ 28 ஆண்டு காலம்‌ கழகப்‌ பொதுச்‌ செயலாளராகப்‌ பணியாற்றி, வெற்றி மேல்‌ வெற்றிகளைக்‌ குவித்து, அரை நூற்றாண்டில்‌ 31 ஆண்டுகள்‌ தமிழகத்தை ஆண்டு வீறுநடை போட்டு வரும்‌ அதிமுக பொதுச்‌ செயலாளராக என்னை, ஏகோபித்த ஆதரவோடு ஒருமனதாகத்‌ தேர்ந்தெடுத்துள்ள கழக உடன்பிறப்புகள்‌ அனைவருக்கும்‌ எனது இதயபூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்‌.

இது மக்களாட்சி யுகம்‌. மக்களாட்சித்‌ தத்துவத்தின்‌ அடிப்படை நோக்கமே சாமானிய மக்களின்‌ கரங்களில்‌ அதிகாரத்தை சேர்ப்பதுதான்‌. பேரறிஞர்‌ பெருந்தகை அண்ணா அவர்கள்‌ அந்த உயரிய நோக்கத்தில்‌ தான்‌ இயக்கம்‌ கண்டார்கள்‌. அவர்‌ வழியில்‌ புரட்சித்‌ தலைவரும்‌, பரட்சித்‌ தலைவி அம்மா அவர்களும்‌ ஏழை, எளிய, சாமானிய மக்களில்‌ பெரும்பாலானோரை ஜனநாயக அதிகார கோபுரங்களின்‌ உச்சிக்‌ கலசத்தில்‌ வைத்து ஜனநாயக மாண்புகளை உயர்த்திப்‌ பிடித்தார்கள்‌.

போற்றுதலுக்குரிய தலைவர்களின்‌ சீரிய வழிகாட்டுதலோடு பயணித்து வரும்‌ அதிமுகவில் ஒரு கிளைக்‌ கழகச்‌ செயலாளராக, நான்‌ அரசியல்‌ பயணத்தைத்‌ தொடங்கிய நிலையில்‌, எனது உழைப்பையும்‌, நேர்மையையும்‌ அங்கீகரித்து இன்று “கழகப்‌ பொதுச்‌ செயலாளர்‌'” என்கிற உயர்‌ உச்ச பொறுப்பிலே அமர்த்தி இருக்கிறது. இது, எனக்கு கொடுக்கப்பட்ட அங்கீகாரம்‌ மட்டுமல்ல நம்முடைய கழகம்‌ மக்களாட்சித்‌ தத்துவத்திற்கு கொடுத்திருக்கின்ற அங்கீகாரம்‌. நாட்டின்‌ கடைசி மனிதனுக்கும்‌ அதிகாரத்தில்‌ பங்கு உண்டு என்பதை, நம்முடைய கழகம்‌ செயல்படுத்திக்‌ காட்டியிருக்கின்ற தருணம்‌.

பிறப்பின்‌ அடிப்படையில்‌ தலைமையை தீர்மானிக்காமல்‌, ஜனநாயக அடிப்படையில்‌ தலைமையை தேர்ந்தெடுத்து, ஜனநாயக மாண்புகளைக்‌ காத்து நிற்கும்‌ கழகத்தின்‌ பொதுச்‌ செயலாளர்‌ பொறுப்பை ஏற்றிருப்பதை எண்ணி பெருமிதம்‌ அடைகிறேன்‌.

கழக‌ பொதுச்‌ செயலாளர்‌ தேர்தலில்‌, நான்‌ பொதுச்‌ செயலாளராக பொறுப்பேற்க வேண்டும்‌ என்று, தமிழகத்தின்‌ பல்வேறு பகுதிகளிலும்‌ இருந்து என்‌ சார்பாக வேட்பு மனுக்களை தாக்கல்‌ செய்துள்ள கழக சொந்தங்கள்‌ அனைவருக்கும்‌ எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்‌.

“எனக்கு பின்னாலும்‌, இன்னும்‌ எத்தனை நூற்றாண்டுகள்‌ வந்தாலும்‌ அதிமுக மக்களுக்காகவே இயங்கும்‌”என்று சூளுரைத்த, நம்‌ இதய தெய்வம்‌ புரட்சித்‌ தலைவி அம்மா அவர்களின்‌ சபதத்தை நிறைவேற்ற வேண்டிய மாபெரும்‌ பொறுப்பு நமக்கு உள்ளது.

கழக நிறுவனத்‌ தலைவர்‌ புரட்சித்‌ தலைவர்‌ எம்ஜி.ஆர்‌, புரட்சித்‌ தலைவி அம்மா ஆகியோரின்‌ நல்லாசியோடும்‌, கழக நிர்வாகிகள்‌ மற்றும்‌ கழக உடன்பிறப்புகளின்‌ ஒத்துழைப்போடும்‌, சிறந்த முறையில்‌ கழகத்தை வழிநடத்தி, மீண்டும்‌ அதிமுக ஆட்சி மலர்வதற்கு இரவு, பகல்‌ பாராமல்‌ அயராது பணியாற்றுவேன்‌ என்ற உறுதியை மனதார அளிக்கிறேன்‌.

அதிமுக வெற்றிப்‌ பயணம்‌ தொடர, தொடர்ந்து வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம்‌ இருக்கின்ற தமிழ் நாட்டு மக்கள்‌ அனைவருக்கும்‌ எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்‌” என்று குறிப்பிட்டுள்ளார்.

செல்வம்

எதிர்க்கட்சிகள் ஒற்றுமை: ஸ்டாலின் தலைமையில் நாளை சமூக நீதி மாநாடு!

கலாஷேத்ரா பேராசிரியர் தலைமறைவு!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts