நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று (ஜூன் 4) வெளியான நிலையில், அதிமுக கூட்டணி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் பின்னடைவை சந்தித்துள்ளது.
இந்தநிலையில், தேர்தலின் போது இரவு பகல் பார்க்காமல் உழைத்த அதிமுக தொண்டர்களுக்கு என்ன கைமாறு செய்யப்போகிறேன் என்று தெரியாமல் கண்கலங்குவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று உருக்கமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில்,
“வீழ்த்த முடியாத மக்கள் பேரியக்கம் அதிமுக என்பது மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் முடிவுகள் நாம் எதிர்பார்த்தது போலவே அதிகார பலமும், பண பலமும், பொய்ப் பிரச்சார பலமும், அறத்திற்கு அப்பாற்பட்ட சூழ்ச்சி பலமும் மிகுந்தவர்களுக்கு சாதகமாக வந்திருக்கின்றன.
தற்போது வெளிவந்துள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் முடிவுகள், மக்களின் ஏகோபித்த எண்ணங்களை முழுமையாக பிரதிபலிக்கும் முடிவு அல்ல என்பதைத் தெரிவித்துக்கொள்வதோடு, அதிமுக வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வாக்களித்த வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
இந்தத் தேர்தல் முடிவுகள் நம்மை சோர்வடையச் செய்யாது. 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான பாடமும், படிப்பினையும் நமக்குக் கிடைத்திருக்கிறது.
2026 சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம். “எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே உன்னை இடரவைத்து, தள்ளப் பார்க்கும் குழியிலே அத்தனையும் தாண்டி காலை முன் வையடா – நீ அஞ்சாமல் கடமையிலே கண் வையடா! சத்தியமே லட்சியமாய் கொள்ளடா” என்ற புரட்சித் தலைவரின் பாடல் நமக்கு என்றைக்கும் வழிகாட்டும்.
வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
தனித்து நின்றோம். கொள்கை வீரர்களாக தலை நிமிர்ந்து நிற்கிறோம். அதிமுக அதிகார பலம் படைத்தவர்களின் நிழலில், மக்கள் நலனையும், மாநிலத்தின் பெருமையையும் இழக்காமல், பதவி என்பது எங்களைப் பொறுத்தவரை மக்களுக்குப் பணியாற்ற ஒரு பாதையே தவிர, எல்லா நேரத்திலும் கொள்கைச் சிங்கங்களாகவே அரசியல் களமாடுவோம் என்பதை இந்தத் தேர்தல் உலகுக்கு உரக்கச் சொல்லி இருக்கிறது.
“இனி அதிமுக அவ்வளவுதான்” என்று 1980, 2004 மற்றும் 2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின் போதும், 1996 சட்டமன்றத் தேர்தல் முடிவின்போதும்; ஏன், 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவும், நம் கதை முடிந்ததாக ஆரூடம் கூறி ஆனந்தப்பட்டவர்களின் அகங்காரத்தை முறியடித்த பெருமை தொண்டர்களுக்கு உண்டு.
2021, சட்டமன்றப் பொதுத் தேர்தலில் அதிமுக கூட்டணி 75 இடங்களைப் பெற்று நாம் யார் என்பதை உலகுக்குக் காட்டினோம். இந்தத் தேர்தல் முடிவுகள் நம்மை சோர்வடையச் செய்யாது.
2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான பாடமும், படிப்பினையும் நமக்குக் கிடைத்திருக்கிறது.
2026 சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம். எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காமல், இதுநாள்வரை அதிமுக மக்களுக்கு ஆற்றிய தொண்டுகளை மனதில் கொண்டு நம் கூட்டணிக்கு வாக்களித்த தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்
தேர்தலின் போது அல்லும், பகலும் அயராது உழைத்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் திருப்பாதம் பணிகிறேன்.
‘உங்கள் உழைப்புக்கும், தியாகத்திற்கும் என்ன கைமாறு செய்யப்போகிறேன்.’ என்று கண் கலங்குகிறேன். இன்னும் தீவிரமாகவும், தீர்க்கமாகவும் பணியாற்றி, நீங்கள் தலைநிமிர்ந்து வெற்றி நடை போட உறுதி ஏற்கிறேன். உங்கள் ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றியை பாசத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கேரளாவில் பெரும்பான்மை தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை!
“தெலுங்கு தேசம், ஜேடி(யு) – உடன் கூட்டணி அமைத்து ஆட்சியில் அமர்வீர்களா?” : ராகுல் பதில்!