முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 8-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (டிசம்பர் 5) அனுசரிக்கப்படுகிறது. ஜெயலலிதாவின் நினைவு நாளை ஒட்டி தமிழகம் முழுவதும் அதிமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அவருடன் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, நத்தம் விஸ்வநாதன், ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், பா.வளர்மதி, அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் மற்றும் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கருப்பு சட்டை அணிந்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில், உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அப்போது பேசிய பழனிசாமி, “குடும்ப ஆட்சியில் தந்தை முதல்வர், மகன் துணை முதல்வர், மருமகன் அதிகாரம் செலுத்தும் போலி திராவிட மாடலை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம். பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவோம்” என்று தெரிவித்தார்.
ஜெயலலிதாவை நினைவு கூர்ந்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப்பதிவில்,
“அதிமுக என்ற இயக்கத்தை, பல்வேறு சோதனைகளையும் கடந்து மக்களுக்கான பாதையில் தொடர்ந்து பயணிக்க உயிராய், உணர்வாய், உந்துசக்தியாய்த் திகழும் ஜெயலலிதாவை அவரது நினைவு நாளில் போற்றி வணங்குகிறேன்.
ஜெயலலிதா வழியில் மக்களின் குரலாய் என்றென்றும் ஒலிப்போம். தீயசக்திகளின் ஆட்சியை விரட்டி, அதிமுக ஆட்சியை மீண்டும் அமைத்து, அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கக் கூடிய “அமைதி, வளம், வளர்ச்சி” பொருந்திய தமிழ்நாட்டைக் கட்டமைப்பதே அவருக்கு நாம் செலுத்தும் புகழஞ்சலி” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
குளிர்ந்த நீரில் ஊற வச்சா சாதமாக மாறும் ‘மேஜிக்’ அரிசி… என்ன நடக்கும்?