பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள எடப்பாடி பழனிசாமி வந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விருதுநகரில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 22 பேர் கைது செய்யப்பட்டனர்.
இன்று (செப்டம்பர் 29) மதுரை, சிவகாசி ஆகிய இடங்களில் அதிமுக சார்பில் பிரமாண்ட பொதுக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையொட்டி மதுரை வந்த எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு விமான நிலையத்தில், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், உதயகுமார், செல்லூர் ராஜு மற்றும் எம்எல்ஏக்கள் ராஜன் செல்லப்பா ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.
எடப்பாடி பழனிசாமிக்கு தாமரை மாலை அணிவித்து வேல் வழங்கி வரவேற்றனர்.
விமான நிலைய பயணிகள் வாகனம் நிறுத்தும் இடத்தில் அதிமுகவினர் சர்ச்சைக்குரிய வகையில் மேடை அமைத்து வரவேற்பு அளித்தனர்.
இதைத்தொடர்ந்து விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஏற்பாட்டில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.
அதிமுகவில் விரிசல் இருந்து வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி வருகையொட்டி, விருதுநகரில் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த 22 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக திருமங்கலம் – விருதுநகர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில், தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்புத் தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
மறவர்நலக் கூட்டமைப்பு என்ற பெயரில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தசூழலில் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிவகாசி கூட்டத்தைத் தொடர்ந்து மதுரை வரும் எடப்பாடி பழனிசாமி பழங்காநத்தம் ரவுண்டானா ஜெயம் தியேட்டர் முன்பு நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் மாலை 6 மணிக்கு பேச இருக்கிறார்.
கலை.ரா