கள்ளச்சாராய விவகாரத்தில் குற்றவாளிக்கு நிவாரணம் வழங்கியதாக சமூகவலைதளங்களில் பட்டியல் வெளியான நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று (மே 16) வழங்கினார்.
அதே போல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையையும் அமைச்சர் வழங்கினார்.
இதுகுறித்த பட்டியல் வெளியான நிலையில், அதில் கள்ளச் சாராயத்தை விற்ற கரிக்கந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த அம்மாவாசை என்பவரது பெயர்,
அரசின் 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் பெறும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் பட்டியலிலும் சேர்க்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

இது சமூக வலைதளங்களில் பரவி கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக அரசுக்கு எதிராக கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூரில் கள்ளச்சாராயம் குடித்து பலரும் உயிரிழந்துள்ள நிலையில், அதற்கு காரணமானவர் என்று இந்த அரசு வழக்கு பதிவு செய்துள்ள அம்மாவாசை என்பவர் திமுக ஒன்றிய கவுன்சிலர் நாகப்பன் என்கிறவருடைய தம்பி ஆவார்.
குற்றம் சாட்டப்பட்டுள்ள அம்மாவாசை தானும் அந்த மதுபானத்தை அருந்தியதாக அவரும் மருத்துவமனையில் தன்னை அனுமதித்துக் கொண்டார்.
இந்நிலையில் போலி மதுபான வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட அம்மாவாசைக்கு இந்த அரசு போலி மதுபானத்தால் பாதிக்கபட்டவருக்கு வழங்கப்படும் 50 ஆயிரம் நிவாரணம் வழங்கி இருக்கிறது. இதுதான் நவீன திராவிட மாடல் ஆட்சி போலும். “ என்று விமர்சித்துள்ளார்.
மேலும், “சில நாட்களுக்கு முன்னாள் ஒருவர் தன்னை மாற்றுத்திறனாளி இந்திய கிரிக்கெட் கேப்டன் என்று பொய் சொல்லி முதல்வரை சந்தித்து ஒருவர் பரிசு பெற்று செல்கிறார் தற்போது என்னவென்றால் கள்ளச்சாராயம் காய்ச்சி உயிரைப் பறித்தவர்க்கு அவரின் செயலை பாராட்டி பரிசு கொடுப்பது போல் நிவாரணம் கொடுக்கப்படுகிறது .
இந்தியாவிலேயே, ஏன் இந்த உலகத்திலேயே குற்றவாளிக்கு நிவாரணம் வழங்குகின்ற கோமாளித்தனமான ஒரே அரசு தற்போது ஆட்சியிலுள்ள தி மு க அரசு தான்! நிர்வாக திறன் அற்ற முதல்வரின் தலைமையில் ஆட்சி நடக்கவில்லை இங்கே சர்க்கஸ் தான் நடக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
கள்ளச்சாராய மரணம்: ஒரே நாளில் குற்றவாளி மீது குண்டாஸ்! என்ன நடந்தது?
MIvsLSG: பல்ஸை எகிற வைத்த பல்தான்ஸ்.. த்ரில் வெற்றி பெற்ற லக்னோ