எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தயாநிதிமாறன் எம்.பி தொடர்ந்த அவதூறு வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
கடந்த மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தயாநிதி மாறன் அவருடைய நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் 75 சதவீதத்தைச் செலவு செய்யவே இல்லை. அப்படியென்றால், இவர் எப்படி செயல்பட்டிருப்பார் என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்” எனப் பேசியிருந்தார்.
இதனையடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் எம்.பி. சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கில், “தொகுதி மேம்பாட்டு நிதியை 75% பயன்படுத்தவில்லை என சென்னை புரசைவாக்கத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சு தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயவேல் முன்பு இன்று (ஆகஸ்ட் 27) விசாரணைக்கு வந்தது.
அப்போது பலத்த பாதுகாப்புக்கு இடையே எடப்பாடி பழனிசாமி ஆஜரானார்.
அப்போது அவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இன்பதுரை, பத்திரிக்கைகளில் செய்தி வந்ததன் அடிப்படையிலேயே எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் தயாநிதிமாறன் குறித்த கருத்து தெரிவித்ததாகவும், இது வேண்டுமென்றே என் மீது குற்றச்சாட்டு வைக்கவேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனை சட்டப்படி எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து வழக்கை செப்டம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
”குடிக்க வேண்டாமென்று சொல்லும் தகுதி எனக்கில்லை”: மரணத்துக்கு முன் பிஜிலி ரமேஷ் உருக்கம்!
Share Market: செபி விதித்த தடையால் தொடர் சரிவில் ரிலையன்ஸ் பங்குகள்!