சென்னையில் சமீபத்தில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை, டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளதாக இன்று (மார்ச் 13) அறிக்கை வெளியிட்டுள்ளது. ed report on tasmac raid
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான முறைகேடு தொடர்பாக சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 7 இடங்களில் அமலாக்கத்துறை கடந்த வாரம் 3 நாட்களாக சோதனை நடத்தியது.
இந்தச் சோதனை குறித்து தற்போது அமலாக்கத்துறை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாடு மாநில சந்தைப்படுத்தல் கழகம் லிமிடெட் (TASMAC) மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்கள்/நபர்கள் தொடர்பான பல்வேறு குற்றங்களுக்காக, PMLA, 2002 இன் விதிகளின் கீழ், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் உள்ள பல்வேறு இடங்களில் 06.03.2025 அன்று முதல் அமலாக்கத்துறை சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டது. அப்போது, பல்வேறு குற்றவியல் ஆவணங்கள் மீட்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன” எனத் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுபான கொள்முதல் மூலம் தனியார் மதுபான நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளன. சோதனையில் கணக்கில் வராத ரூ. 1,000 கோடிக்கும் மேல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முறைகேடுகளில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
பார் உரிம டெண்டர்களை ஒதுக்கியதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. டாஸ்மாக் அதிகாரிகளின் உறவினர்களுக்கு டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுபான ஆலைகள் – டாஸ்மாக் அதிகாரிகள் இடையே நேரடி தொடர்பு இருந்துள்ளது. டிஸ்டில்லரிகள் மற்றும் பாட்டிலிங் நிறுவன சோதனையில் நிதி மோசடி தெரியவந்துள்ளது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.