அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு சொந்தமான ரூ.100.92 கோடி மதிப்பிலான இரண்டு அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
கடந்த 2011-16 அதிமுக ஆட்சியில் வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம்.
இந்த காலகட்டத்தில் சென்னை பெருங்களத்தூரில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட ஸ்ரீராம் பிராப்பர்ட்டீஸ் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்துக்கு திட்ட அனுமதி வழங்க வைத்திலிங்கம் ரூ.27.90 கோடி லஞ்சம் பெற்றதாக அறப்போர் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில், வைத்திலிங்கம் அவரது இரு மகன்கள் உட்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்ததன் அடிப்படையில் அமலாக்கத் துறை சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுத்தது.
அதன்படி, வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களிலும், ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டீஸ் நிறுவனம் தொடர்பான இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சோதனை நடத்தினர்.
இந்தநிலையில், வைத்திலிங்கத்திற்கு சொந்தமான ரூ.100.92 கோடி மதிப்பிலான இரண்டு அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

இதுதொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.வைத்திலிங்கம் மீதான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக, சென்னை மண்டல அமலாக்கத்துறை அலுவலகம், ரூ.100.92 கோடி மதிப்புள்ள இரண்டு அசையா சொத்துக்களை ஜனவரி 9 அன்று முடக்கியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…