அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி. வேலுமணி, 3ஆவது முறையாக லஞ்ச ஒழிப்புத்துறையின் ரெய்டு வளையத்துக்குள் சிக்கியுள்ளார்.
2021ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்தவுடன் அதிமுக ஆட்சியில் ஊழலில் ஈடுபட்ட அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.
அதன்படி ஆட்சி அமைந்த பிறகு அடுத்தடுத்த மாதங்களில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனையை நடத்தினர்.
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 10ஆம் தேதி எஸ்.பி.வேலுமணிக்குச் சொந்தமான 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். இந்த ரெய்டு அன்று நள்ளிரவு வரை நீடித்தது.
தனது உறவினர்களுக்கு 810 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு டெண்டர்களை ஒதுக்கீடு செய்து முறைகேட்டில் ஈடுபட்டதாக நடத்தப்பட்ட இந்த ரெய்டின் போது, 13 லட்சம் ரூபாய் ரொக்கப்பணமும், 2 கோடி ரூபாய் வைப்பு நிதிக்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து, அடுத்த 7 மாதங்களில் மீண்டும் எஸ்.பி, வேலுமணியை குறிவைத்து லஞ்ச ஒழிப்புத்துறை களமிறங்கியது. கடந்த மார்ச் 15ஆம் தேதி, எஸ்.பி வேலுமணிக்கு சொந்தமான 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.
சுமார் 58 கோடியே 23 லட்சம் ரூபாய் எஸ்.பி.வேலுமணி வருமானத்தை தாண்டி சொத்து சேர்த்ததாகவும், இது அவருடைய மொத்த வருமானத்தை விட 3 ஆயிரத்து 928 சதவீதம் அதிகம் என லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்தது.
இந்த சோதனையில், கணக்கில் வராத 84 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. 34 லட்சம் ரூபாய் அளவிற்கு எஸ்.பி.வேலுமணி கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்யப்பட்டதும் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் தான் தற்போது 3-வது முறையாக எஸ்.பி. வேலுமணி ரெய்டு வளையத்துக்குள் சிக்கியுள்ளார்.
கடந்த 2015 -2018-ம் ஆண்டு வரை கிராமப்புறங்களில் தெரு விளக்கை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் ஒப்பந்தங்களை தனக்கு வேண்டியவர்களுக்கு ஒதுக்கி, அரசுக்கு 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனையடுத்து சென்னையில் 10 இடங்கள், கோவையில் 9 இடங்கள், மற்றும் தாம்பரம் ஆவடி திருச்சி செங்கல்பட்டு உள்ளிட்ட ஊர்களில் 7 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு நடத்தி வருகிறது.
கொங்கு மண்டலத்தில் மிகுந்த செல்வாக்கோடு வலம் வரும் எஸ்.பி, வேலுமணி தொடர்ந்து 3-வது முறையாக குறிவைக்கப்பட்டுள்ள சம்பவம் அதிமுக தொண்டர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அப்துல் ராபிக், செல்வம்
அரசுக்கு ரூ.500 கோடி நஷ்டம் : எஸ்.பி வேலுமணி வீட்டில் ரெய்டு!