நாடாளுமன்ற தேர்தலில் எந்த சின்னத்தில் போட்டி? – துரை வைகோ விளக்கம்!
நாடாளுமன்ற தேர்தலில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற மதிமுக நிர்வாகிகள் விருப்பத்தை ஸ்டாலின் நிறைவேற்றுவார் என்று மதிமுக முதன்மை செயலாளர் வைகோ இன்று (நவம்பர் 19) தெரிவித்துள்ளார்.
பெரம்பலூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ, “22 தமிழக மீனவர்களை இலங்கை அரசு கைது செய்து விடுவித்துள்ளது. கடந்த ஐந்து வருடங்களாக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்ந்து அதிகரித்துள்ளது. மீன்பிடி தொழில் மட்டுமே அவர்களது வாழ்வாதாரம்.
இலங்கை அரசின் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இலங்கை கடல் எல்லைக்குள் சென்று மீன் பிடித்ததாக பொய்யான செய்தியை இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இலங்கை அரசின் மறைமுக ஆதரவுடன் கடற்கொள்ளையர்கள் மீனவர்கள் உடமைகளை பறிமுதல் செய்கிறார்கள். மத்திய அரசு இதற்கு தீர்வு காண வேண்டும்
இலங்கை கடற்படையோ, இலங்கை கடற்கொள்ளையர்களோ தமிழக மீனவர்களை தாக்கினால் சுட்டு வீழ்த்த வேண்டும். அப்போது தான் தமிழக மீனவர்களை தாக்கும் போது அவர்களுக்கு பயம் ஏற்படும்.
20 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தியிருக்கிறார். ஆளுநரின் நடவடிக்கை தமிழக மக்களின் நலனுக்கு எதிரானது. நேற்றைய சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் அதிமுக வெளிநடப்பு செய்தது கண்டிக்கத்தக்கது. ஆளுநரின் நடவடிக்கையை கண்டிக்காமல் வெளிநடப்பு செய்தது மத்திய பாஜக அரசை மறைமுகமாக ஆதரிப்பது போல் தான் உள்ளது” என்றார்.
நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக எந்த சின்னத்தில் போட்டியிடும் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த துரை வைகோ, “கூட்டணி தொகுதி ஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை துவங்கவில்லை. மதிமுகவின் சின்னம் பம்பரம். கடந்த உள்ளாட்சி தேர்தலில் பல இடங்களில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளோம். நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக தோழர்கள், நிர்வாகிகள் விருப்பத்தை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
உலகக்கோப்பை இறுதிப்போட்டி: வீட்டில் குடும்பத்துடன் காணும் முதல்வர்!
ஆளுநர் டெல்லி பயணம்: காரணம் இதுதான்!