சாபக்கேடு : ஆளுநர் செயல் குறித்து துரை வைகோ

Published On:

| By Monisha

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஒரு தனிப்பட்ட இயக்கத்தின் சார்பாகக் குரல் கொடுத்து வருகிறார் என்று மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கரிசல் இலக்கியத்தின் தந்தை கி. ராஜநாராயணன் நினைவாகச் சமீபத்தில் திறக்கப்பட்ட நினைவரங்கத்தை மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ இன்று (டிசம்பர் 4) பார்வையிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஆன்லைன் ரம்மி தடை அவசரச் சட்டம் கொண்டு வருவதற்கு முன்பு 17 பேர் உயிரிழந்திருந்தனர்.

ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை 30க்கு மேல் அதிகரித்துள்ளது. ஆன்லைன் அவசரச் சட்டம் சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட பின்னரும், ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை.

அவர் கேட்ட கேள்விகளுக்கும் சட்டத்துறை அமைச்சர் பதிலளித்துள்ளார். இருப்பினும் தற்போது வரை ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இது ஒரு பெரிய சாபக்கேடு என்று தான் சொல்ல வேண்டும்.

தமிழக ஆளுநர் தமிழக மக்களுக்காகச் செயல்பட வேண்டும். 20-க்கும் மேற்பட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. ஆளுநர் தனது கடமையை முதலில் செய்ய வேண்டும்.

அதை விட்டுவிட்டுத் தனிப்பட்ட ஒரு இயக்கத்தின் சார்பாக, ஒரு சித்தாந்தத்தின் சார்பாகத் தொடர்ந்து குரல் கொடுப்பதும் பணி புரிவதும் சிறந்தது அல்ல.
ஜனநாயக நாட்டில் இப்படிச் செயல்படுவது மிகப்பெரிய ஜனநாயக கேடு என்று தான் சொல்ல வேண்டும்” என்று கூறினார்.

மோனிஷா

வங்காளதேச பந்துவீச்சில் திணறிய இந்திய அணி!

ராகுலை தொடர்ந்து பிரியங்கா: காங்கிரஸின் புதிய ப்ளான்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share