ஆறு மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்படும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழ்நாட்டில் இனியாவது தாமதிக்காமல் செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது சாத்தியமற்ற ஒன்று என்ற பிம்பம்தான் கட்டமைக்கப்பட்டிருந்தது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை எந்த காலத்திலும் செயல்படுத்த முடியாது. பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது பேசுவதற்கு இனிப்பாக இருக்கும். நடைமுறைப் படுத்துவதற்கு மிகவும் கசப்பானதாக இருக்கும் என்பது தான் பொருளாதார வல்லுநர்களின் கருத்தாக இருந்தது.
ஆனால், அதையெல்லாம் முறியடித்து ராஜஸ்தான் மாநிலம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தியது.
அதைத் தொடர்ந்து சத்தீஷ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப், இந்த மாநிலங்களுக்கு முன்பே மேற்கு வங்கம் என ஐந்து மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ஆறாவது மாநிலமாக இமாச்சலப் பிரதேசம் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது.
இமாச்சல சட்டப்பேரவைத் தேர்தலின்போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்திருந்தது.
அதன்படியே ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் முதல் அறிவிப்பாக பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்திருக்கிறது.
இந்தியாவின் ஆறு மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்படும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழ்நாட்டில் ஏன் செயல்படுத்த முடியாது? பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழ்நாடு தான் நாட்டுக்கே முன்னோடியாக இருந்திருக்க வேண்டும்.
ஆனால், அந்த வாய்ப்பை தமிழகம் இழந்துவிட்டது. இதுவரை நடைமுறைப் படுத்தப்படாத நிலையில், இனியாவது தாமதிக்காமல் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
-ராஜ்