பெண் பத்திரிகையாளரிடம் இழிவாக பதிலளித்த சீமானுக்கு சென்னை, கோவை பத்திரிகையாளர் மன்றங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஈரோடு இடைத்தேர்தலை முன்னிட்டு பிரச்சாரத்திற்காக இன்று (ஜனவரி 24) கோவை விமான நிலையம் வந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது புதிய தலைமுறை ஊடக பெண் பத்திரிகையாளர், நீங்கள் பிரபாகரனுடன் இருந்த புகைப்படம் குறித்து பிரபாகரனின் அண்ணன் மகன் தெரிவித்த கருத்து பெரிய விமர்சனத்துக்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறது என்று கேள்வி எழுப்பினார்.
இதனால் ஆவேசமான சீமான், அநாகரிகமான வார்த்தையை பயன்படுத்தி பதிலளித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.
இந்நிலையில் சீமானுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
அதில், பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் கண்ணியக் குறைவான வார்த்தைகளை பயன்படுத்திவரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
ஊடகங்களில் உரையாடும் எளிய மனிதர்களே நாகரிகமான சொற்களை பயன்படுத்தும்போது, ஒரு கட்சித்தலைவரான சீமான் பொது இடங்களிலும் ஊடக சந்திப்புகளிலும், தொடர்ந்து ஆபாச மற்றும் இழி சொற்களை பயன்படுத்திவருவது அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.
கோவையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், பிரபாகரனின் அண்ணன் மகன் சீமான் மீது எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டுகளை கேள்வியாக முன்வைத்த புதிய தலைமுறை பெண் செய்தியாளரிடம், முகம்சுளிக்கும் வகையில் பதிலளித்திருக்கிறார். சீமான், செய்தியாளரை தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு சொல்லவில்லை என்றாலும், பெண் செய்தியாளருக்கு பதிலளிக்கிறோம் என்ற கவனமும் பொறுப்பும் இல்லாமல் (அச்சிலேற்ற முடியாத வார்த்தைகளைக் கொண்டு) பேசியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
சீமான், பொது இடங்களிலும் ஊடக சந்திப்புக்களிலும் முதிர்ச்சியான சொற்களைப் பயன்படுத்துவதும், கண்ணியம் அறிந்து நடந்துகொள்ள வேண்டும்” என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தியுள்ளது.
கோவை பத்திரிகையாளர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பொது வாழ்க்கைக்கு வந்து ஆண்டுகள் பல கழிந்தும் பொதுவெளியில் பெண்கள் மத்தியில் நாகரீகமாக பேசத் தெரியாத ச்ச்ச்சீமானே.. கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தின் வன்மையான கண்டனங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.