“இலவசம் கொடுத்து நிதிச்சுமையை கூட்டாதீர்கள்” – நிர்மலா சீதாராமன்

Published On:

| By Kalai

Dont add to financial burden by giving freebies

இலவசங்கள் கொடுப்பது பிரச்சினை அல்ல, அதை எப்படி கொடுப்பீர்கள் என்பதே பிரச்சினை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த பட்ஜெட்டில் நடுத்தர வர்க்க மக்களுக்கான திட்டங்கள் அதிகம் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கு ஏற்றபடி, ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சார்ந்த வார இதழான பாஞ்சஜன்யா பத்திரிக்கை ஏற்பாடு செய்த நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதுகுறித்து பேசியிருக்கிறார்.  

நானும் மிடில் கிளாஸை சேர்ந்தவள்தான். எனவே, நடுத்தர வர்க்கத்தின் அழுத்தத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நடுத்தர வர்க்கத்தினரைச் சேர்ந்த ஒருவராகவே என்னை நான் அடையாளப்படுத்திக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் மாநில அரசுகளை, குறிப்பாக ஆம் ஆத்மி கட்சியை குறிப்பிட்டு பேசிய அவர், சில அரசுகள் வரம்பை மீறி தங்கள் மக்களுக்கு இலவசங்களை வழங்குகின்றன, ஆனால் அந்த சுமையை பின்னர் மத்திய அரசு தலையில் கட்டிவிடுகின்றன.

பெரும்பாலான அரசியல் கட்சிகள் தேர்தலின் போது வாக்குறுதிகளை வழங்குகிறார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு தங்கள் மாநிலங்களின் பட்ஜெட்டைப் பார்த்த பிறகு, அது சாத்தியமில்லை என்பதை அவர்கள் உணர்ந்து கொள்கிறார்கள்.

இலவசம் என்ற பெயரில் நீங்கள் வாக்குகளை கேட்டிருந்தால், எப்படி சுமையை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள முடியும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இலவசம் பற்றி பேசி ஒருவரையொருவர் சிக்க வைக்க முயற்சிக்கிறார்கள். இலவசம் வழங்குவது பிரச்சினை அல்ல, அந்த இலவசத்தை உங்களால் கொடுக்க முடியுமா இல்லையா என்பதுதான் பிரச்சினை என்றார்.

அதேசமயம் காங்கிரசை விமர்சித்த நிதியமைச்சர், இந்தியாவின் பொருளாதாரத்தில் வங்கிகள் பெரும் பங்களிப்பைக் கொண்டுள்ளன. வங்கிகள் இயங்குவதற்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும் என்று மோடி அரசு நினைக்கிறது.

2020-21 ஆம் ஆண்டில் பொதுத்துறை வங்கிகள் மொத்தமாக ரூ 31,820 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளன. அதைத் தொடர்ந்து, கோவிட்-19 நெருக்கடி இருந்தபோதிலும், ஒருங்கிணைந்த லாபம் இரண்டு மடங்காக உயர்ந்து ரூ.66,539 கோடியாக இருந்தது. 

வங்கிகளின் மொத்த Non-performing Assets விகிதம் ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 5 சதவீதமாக குறைந்துள்ளதாகவும், வங்கி அமைப்பு நல்ல மற்றும் நல்ல மூலதனத்துடன் இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.

நாட்டை ஆட்சி செய்த முந்தைய அரசாங்கம், தங்கள் உறவினர்கள் மற்றும் கட்சிக்காரர்களுக்கு பலன்களை வங்கிகளில் இருந்து பெற்றுக் கொண்டன என்று நிர்மலா சீதாராமன் பேசினார்.

கலை.ரா

1% பணக்காரர்களிடம் நாட்டின் 40% சொத்து!

வசூலில் துணிவை முந்தும் வாரிசு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share