யோகி ஆதித்யநாத் சந்நியாசியா? ரஜினிக்கு ’முரசொலி’ சரமாரி கேள்வி!

Published On:

| By Selvam

நடிகர் ரஜினிகாந்த் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்ததைத் தொடர்ந்து அவர் கொடுத்த விளக்கத்தின் அடிப்படையில்  ரஜினிக்கு திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலி சரமாரியான கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

ஜெயிலர் படத்தில் நடித்துள்ள ரஜினிகாந்த் அந்தப் படத்தின் ரிலீஸ் சமயத்தில்  இமயமலைக்கு ஆகஸ்ட் 9-ஆம் தேதி ஆன்மீக சுற்றுப்பயணம் சென்றார். இந்த பயணத்தின் போது ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், உத்தபிரதேச ஆளுநர் ஆனந்தி பென் பட்டேல், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ஜன்சத்தாதல் லோக்தண்ட்ரிக் கட்சி சட்டமன்ற உறுப்பினரும் பல கிரிமினல் வழக்குகளில் சிறை சென்றவருமான ரகுராஜ் பிரதாப் சிங் உள்ளிட்டோரை சந்தித்தார். ரஜினியின் இந்த சந்திப்புகள் அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்தது.

இந்தசூழலில் ஆகஸ்ட் 16-ஆம் தேதி யோகி ஆதித்யநாத் காலில் ரஜினி விழுந்து ஆசி வாங்கியது இந்தியா முழுவதும் பேசுபொருளானது. 51 வயதான யோகி காலில் 72 வயதான ரஜினி விழலாமா? என்றும் சந்நியாசி, யோகிகள் காலில் விழுந்து ரஜினி ஆசி வழங்குவது அவரது இயல்பு என்றும் இருவிதமான விவாதங்கள் நடந்தன.

இந்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமான தனது 10 நாட்கள் ஆன்மீக பயணத்தை முடித்துவிட்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி சென்னை திரும்பிய ரஜினி, யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது குறித்து தெளிவுபடுத்தினார். செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, “என்னுடைய பயணத்தின் போது நட்பு ரீதியாக அரசியல் தலைவர்களை சந்தித்தேன். சந்நியாசி, யோகி ஆகியோர் நம்மை விட வயதில் சிறியவர்களாக இருந்தாலும் காலில் விழுந்து வணங்குவது எனது பழக்கம்” என்று தெரிவித்தார்.

யோகி ஆதித்யநாத்துக்கு ரஜினி கொடுத்த முக்கியத்துவம் என்பது இந்திய அளவில் யோகியின் பிம்பத்தை உயர்த்த நினைப்பதாகவே சில பேச்சுக்கள் எழுந்தது. இந்தசூழலில் ரஜினி, யோகி சந்திப்பு குறித்த விவாதங்கள் தமிழக அரசியல் களத்திலும் எதிரொலித்தது.

விசிக தலைவர் திருமாவளவன், “ரஜினிகாந்த் மீது தமிழக மக்கள் எவ்வளவு உயர்ந்த மதிப்பை வைத்திருக்கிறோம். தலைவர்களை சந்திப்பது பிரச்சனையல்ல. காலில் விழுவது தான் வேதனையாக இருக்கிறது” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

பாஜக தலைவர் அண்ணாமலை, “யோகி ஆதித்யநாத் காலில் நடிகர் ரஜினிகாந்த் விழுந்து வணங்கியதில் எந்த தவறும் இல்லை. யோகி ஆட்சி தமிழ்நாட்டில் அமைந்திருந்தால் நல்லாட்சியாக இருந்திருக்கும். வேலைகள் இல்லாத அரசியல் கட்சிகள் ரஜினிகாந்த் குறித்து தேவையில்லாத கருத்துக்களை வெளியிடுகின்றனர்” என்று தெரிவித்திருந்தார்.

இந்தசூழலில் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி, யோகி காலில் ரஜினி விழுந்தது குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து தலையங்கம் தீட்டியுள்ளது.

பொதுவாகவே திமுக மற்றும் அக்கட்சியின் தலைமை ரஜினியுடன் இணக்கமான உறவை கையாண்டு வருகிறது. சமீபத்தில் கூட தன்னுடைய பிஸி ஷெட்யூலுக்கு இடையில் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படத்தை நேரம் ஒதுக்கி பார்த்த முதல்வர் ஸ்டாலின், ஆன்மீக பயணத்திலிருந்த ரஜினியைத் தொடர்புகொண்டு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

சென்னை திரும்பிய ரஜினியும், “எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, மக்களுக்கு நல்ல படத்தை கொண்டு சேர்த்த தயாரிப்பாளர் கலாநிதி மாறனுக்கு நன்றி” என தெரிவித்திருந்தார். இப்படி திமுக வட்டாரத்தில் நட்பாக பழகிவரும் ரஜினி யோகி காலில் விழுந்ததை “தாடி வைத்தவர் எல்லாம் தாகூர் அல்ல என்பதை போல காவி கட்டியவர் எல்லாம் சந்நியாசி அல்ல” என்று முரசொலி கடுமையாக சாடியுள்ளது.

இன்றைய முரசொலியில் “யார் யோகி? யார் சந்நியாசி? என்ற தலைப்பில் தலையங்கம் வெளியாகியுள்ளது. அதில், “திடீரென்று உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் முன்னுக்குக் கொண்டு வரப்படுகிறார். மோடி முகத்தை வைத்து இனி வெற்றி பெற முடியாது என்று நினைப்பவர்கள், யோகியைக் காட்ட முயற்சிக்கிறார்களா எனத் தெரியவில்லை.

‘குஜராத் மாடல்’ எவ்வளவு பொய்யானதோ அதை விட மிக மோசமானது யோகியின் உ.பி. ‘தாடி வைத்தவர் எல்லாம் தாகூர் அல்ல’ என்பதைப் போலத் தான் காவி கட்டியவர் எல்லாம் சந்நியாசி அல்ல.

அடுத்த வேளையையும் அடுத்த வேலையையும் கருதாமையே துறவறம் ஆகும். மனித வாழ்க்கையில் இருந்தும் பந்த பாசங்களில் இருந்தும் அனைத்து பதவி  பொறுப்புகளில் இருந்தும் அனைத்து அதிகாரத்திலும் இருந்தும் விடுபட்டு தன்னை வருத்தி துறவு மேற்கொள்பவரே துறவி என்று ஆன்மீக மொழியில் சொல்லப்படுகிறது.

திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதும் மனைவியை பாதியில் விட்டுவிட்டுப் போவதும் காவி வேட்டி உடுத்திக் கொள்வதும் சந்நியாசியின் அடையாளம் என்று சிலர் நினைத்துக் கொள்கிறார்கள்.

பலனில் பற்றுக் கொண்டு எந்தச் செயலையும் செய்யாமல் இருப்பதே துறவு நிலை. அந்த வகையில் பார்த்தால் வோட்டுக் கேட்டு அலைந்து அதிகாரத்தின் அத்தனை பலனையும் அனுபவிக்கும் யோகி ஆதித்யநாத் எப்படி சந்நியாசி ஆவார்?

மிகமிகச் சாதாரண அறநெறிகளுக்கும், விதிமுறைகளுக்கும், சட்டதிட்டங்களுக்கும், நியாய தர்மங்களுக்கும் சம்பந்தமில்லாத ஆட்சிதான் யோகியின் ஆட்சி ஆகும். இந்தியாவில் மிகமிக மோசமான ஆட்சியில் முதலிடம் யாருக்காவது தர வேண்டுமானால் அது உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் ஆட்சிக்கு தான்.

பள்ளிப் பிள்ளைகள் சப்பாத்திக்கு குருமா இல்லாமல் உப்பு வைத்துச் சாப்பிட்ட காட்சியை உ.பி.யில் தான் பார்த்தோம்.

கொரோனா காலத்தில் மக்களைக் காப்பாற்றக் கூட எந்த உள்கட்டமைப்பு வசதியும் இல்லாமல் இருந்த மாநிலம் உ.பி. ஒவ்வொரு மாநிலமும் தினமும் எத்தனை பேருக்கு பாதிப்பு என்பதை அறிக்கையாகக் கொடுத்து வந்தபோது அது பற்றி அறிக்கை கொடுக்காத மாநிலம் உ.பி. கொரோனா ஊசிக்குப் பதிலாக நாய்க்கடி ஊசி போட்ட மாநிலம் அது. மக்கள் தேவைக்கு ஆக்ஸிஜன் ஏற்பாடு செய்ய முடியாத காரணத்தால் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு உள்ளானது யோகி ஆட்சி. மின்சார வசதியும் கழிப்பறை வசதியும் இல்லாமல் ஏன் மருத்துவமனைகள் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டது அலகாபாத் நீதிமன்றம்.

உத்திர பிரதேசத்தில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு காரணமாக பலர் உயிரிழந்த நிலையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு உள்ளது என யாராவது கூறினால் அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என உ.பி முதல்வர் யோகி மிரட்டினார்.

உத்திர பிரதேச கொரோனா நிலவரம் மோசமாக உள்ளது என செய்திகள் பரப்பப்பட்டால் அவர்கள் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என யோகி மிரட்டினார். மரணத்தோடு போராடிக் கொண்டிருந்த தன் தாத்தாவுக்காக, ஆக்சிஜன் கேட்டு ட்விட்டரில் பதிவிட்ட இளைஞர் மீது, உத்தரப் பிரதேச காவல்துறை வழக்குப் பதிவு செய்தது” என்று கூறியுள்ளது முரசொலி.

மேலும் அந்த தலையங்கத்தில்,  “பொதுவாகவே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத மாநிலம் அது. பாலியல் பலாத்காரம் அதிகம் நடக்கும் மாநிலங்களில் முதலாவது இடத்தில் உத்தரப்பிரதேசம் இருக்கிறது. அதிலும், சிறுமிகள் பாலியல் பலாத்காரம் நடக்கும் மாநிலத்திலும் உ.பி. முதலாவது இடத்தில் இருக்கிறது. ஒன்றிய அரசின் புள்ளிவிபரமே இதைச் சொல்கிறது.

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற கேரள பத்திரிகையாளர் சித்திக் காப்பான் கைது செய்யப்பட்டார். அவரை உ.பி அரசு சிறுநீர் கழிக்கக் கூட விடாமல் கட்டி வைத்துச் சித்ரவதை செய்தது. சித்திக் காப்பனின் மனைவி ரைகாந்த் காப்பான், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணாவுக்கு கடிதம் எழுதி, சித்திக் காப்பானை சித்திரவதையில் இருந்து காப்பாற்றுமாறு கேட்டுக் கொண்டார். பத்திரிகையாளர் கதியே இது என்றால், சாதாரண பொதுமக்களைப் பற்றிச் சொல்ல வேண்டியது இல்லை.

அரசாங்கத்துக்கு எதிராக எழுதும் பத்திரிகையாளர்கள் அரசாங்கத்துக்குப் பதில் சொல்ல வேண்டும் என்ற அவரது சமீபத்திய உத்தரவு, ‘அறிவிக்கப்படாத எமர்ஜென்சியைப் போன்றது’ என்று சொல்லி இருக்கிறார் பத்திரிகையாளர் அம்பரீஷ் குமார். தவறான செய்தியாக இருந்தால் வழக்கு பதிந்து சிறைக்கு அனுப்பச் சொல்லி இருக்கிறார் இந்த சந்நியாசி. இது சட்டமா? சாபமா?

சட்டம் என்ற பெயரால் சிறுபான்மையினர், தலித்துகள் வேட்டையாடப்படும் மதவாத பாசிச ஆட்சி அது. மனித வள மேம்பாட்டில் 35 ஆவது இடம், மேல்நிலைக் கல்வியில் 24 ஆவது இடம், பள்ளிக் கட்டமைப்பில் 27 ஆவது இடம், பிறக்கும் குழந்தைகள் மரணத்தில் 35 ஆவது இடம், குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டில் 20 ஆவது இடம்,  தனிநபர் சராசரி உற்பத்தியில் 31 ஆவது இடம், பயிற்சி பெற்ற ஆசிரியர்களை வைத்திருப்பதில் 30 ஆவது இடம், அலைபேசி வசதியில் 33 ஆவது இடம், கர்ப்பிணி பெண்கள் உயிரிழப்பில் 16–ஆவது இடம்,  இது தான் இன்றைய உத்தரப் பிரதேசம் ஆகும்.

யோகி யாரோடு போட்டி போடலாம் என்றால் மோடியுடன் போட்டி போடலாம். இருவரும் தான் ஜாடிக்கு ஏற்ற மூடி. மோடியின் சாயம் போனதும், யோகியை வைத்து விற்கப் பார்க்கிறார்கள். யோகியின் சாயமும் வெளுத்துப் போனது தான்” என்று முரசொலி தெரிவித்துள்ளது.

ரஜினிகாந்த் உபி முதல்வர் யோகியை  சந்நியாசி என்று கூறிய நிலையில்,  ‘யார் யோகி, யார் சந்நியாசி?’ என்று கேள்வி எழுப்பியிருப்பது நேரடியாக ரஜினிகாந்துக்கு எழுப்பப்பட்ட கேள்வியாகவும் அவருக்காக அளிக்கப்பட்ட விளக்கமாகவும் உள்ளது.

செல்வம்

புதிய நில வழிகாட்டி மதிப்பு : உங்கள் ஊரில் எவ்வளவு தெரியுமா?

ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் அறிவிப்பு!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share