திமுக தலைவரை தேர்ந்தெடுக்க அக்டோபர் 9 ஆம் தேதி பொதுக்குழு கூட இருக்கிறது.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழுவையும், இரண்டு முறை செயற்குழு கூட்டத்தையும் கூட்டவேண்டும் என்பது விதி. திமுக பொதுக்குழு கடந்த 2020 ஆண்டு கொரோனா காரணமாக ஆன்லைனில் நடைபெற்றது.
திமுகவின் உட்கட்சி தேர்தல் பலகட்டங்களாக நடந்து வருகிறது. அது தற்போது இறுதி நிலையை எட்டியுள்ளதால் திமுக பொதுக்குழு கூட இருப்பதாக அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று (செப்டம்பர் 28) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15 ஆவது பொதுத்தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாமல் இந்த பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.
அக்டோபர் 9 ஆம் தேதி, காலை 9 மணி அளவில் அமைந்தகரையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளியில் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
சுமார் 5000 பேர் பங்கேற்கும் வகையில் பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். இரண்டாவது முறையாகவும் மு.க.ஸ்டாலினே தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
மேலும், அக்டோபர் 9 ஆம் தேதி பொதுக்குழு நடைபெறும் அன்றே தணிக்கை குழு உறுப்பினர்களுக்கான தேர்தலும் நடைபெறும் என்று துரைமுருகன் அறிவித்துள்ளார்.
திமுக துணைப் பொதுச்செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் பதவியை ராஜினாமா செய்ததால் அந்த இடத்திற்கு யாரை நிறுத்துவது என்றும் பொதுக்குழுவில் முடிவு செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்தபிறகு கூடும் முதல் பொதுக்குழு என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கலை.ரா
‘பொறுத்திருந்து பாருங்கள்’ : பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்த பின் பன்னீர்