2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை திமுக வெளியிட்டுள்ளது. திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி தலைமையிலான குழு தயாரித்த 64 பக்க தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு அதன் முக்கிய அம்சங்களை வாசித்தார்.
அதில் முக்கியமானவைகள் என்று அவர் குறிப்பிட்ட வாக்குறுதிகள் பின்வருமாறு:
- மாநிலங்கள் உண்மையான சுயாட்சி பெறும் வகையில் இந்திய அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும்.
- ஆளுநர் பதவி தேவை இல்லையென்றாலும், அந்த பதவி இருக்கும்வரை மாநில முதலமைச்சர்களின் ஆலோசனை பெற்று ஆளுநர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆளுநர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் பிரிவு 361 நீக்கப்படும்.
- உச்சநீதிமன்றத்தின் கிளை சென்னையில் அமைக்கப்படும்.
- புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்.
- ஒன்றிய அரசுப் பணிகளுக்கு தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு, நேர்முகத்தேர்வு நடத்தப்படும்.
- ஒன்றிய அரசு அலுவலகங்களில் தமிழ் பயன்படுத்தப்படும்.
- அனைத்து மாநில மொழிகளுக்கும் சம அளவு நிதி வழங்கப்படும்.
- திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்.
- தாயகம் திரும்பிய இலங்கை தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும்.
- ரயில்வே துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
- புதிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்படும்.
- நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்தப்படும்.
- நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும்.
- நாடு முழுவதும் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்.
- தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
- மாநில முதலமைச்சர்களைக் கொண்ட மாநில வளர்ச்சிக் குழு அமைக்கப்படும்.
- மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 10 லட்சம் ரூபாய் வட்டி இல்லா கடன் வழங்கப்படும்.
- பாஜக அரசின் தொழிலாளர் சட்டங்கள் மறுசீரமைப்பு செய்யப்படும்.
- தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்.
- வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாததற்கு விதிக்கப்படும் அபராதம் நீக்கப்படும்.
- குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 ரத்து செய்யப்படும்.
- ஒன்றிய அளவில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.
- ஜி.எஸ்.டி சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும்.
- தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டின் முக்கியத்துவம் குறையாமல் பாதுகாக்கப்படும்.
- வேளாண் விளைபொருட்களுக்கு மொத்த உற்பத்தி செலவு + 50 விழுக்காடு என்பதை வலியுறுத்தி குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்படும்.
- நாடு முழுவதும் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
- விமான கட்டணம் நிர்ணயிப்பது முறைப்படுத்தப்படும்.
- LPG சிலிண்டர் விலை 500 ரூபாய், பெட்ரோல் விலை 75 ரூபாய், டீசல் விலை 65 ரூபாயாகக் குறைக்கப்படும்.
- பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படாது.
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் வேலை நாட்கள் 100 நாட்களில் இருந்து 150 நாட்களாக அதிகரிக்கப்படும். ஊதியம் 400 ரூபாயாக உயர்த்தப்படும்.
- ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான IIT, IIM, IISC, IIARI ஆகியவை புதிதாக தமிழ்நாட்டில் அமைக்கப்படும்.
- பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட மக்கள் விரோத சட்டங்கள் அனைத்தும் மறுபரிசீலனை செய்யப்படும்.
- ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கைவிடப்படும்.
- மாணவர்களுக்கு வட்டி இல்லாத கல்விக் கடன் 4 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும்.
- ரயில்வே துறையில் வழங்கப்பட்டு வந்த கட்டண சலுகைகள் மீண்டும் வழங்கப்படும்.
- இஸ்லாமியர் மற்றும் இதர சிறுபான்மையினர் மேம்பாடு குறித்து ஆராய்ந்த சச்சார் கமிட்டி பரிந்துரைகள் செயல்படுத்தப்படும்.
- சென்னையில் மூன்றாவது ரயில் முனையம் அமைக்கப்படும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியின் பலம் என்ன? வாக்கு சதவிகிதம் சொல்லும் டேட்டா ரிப்போர்ட்!
திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிட்டார் ஸ்டாலின்
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது!