தமிழக அரசியல் களத்தில் மக்களை சந்தித்து தலைவர்கள் பிரச்சாரம் செய்து வரும் அதே வேளையில், டிஜிட்டல் பிரச்சாரம், விளம்பரங்களிலும் கவனம் செலுத்தி வருகின்றனர்.
குறிப்பாக திமுகவை பொறுத்தவரை, பாஜக ஆட்சியில் விலைவாசி உயர்வு, மோடி சுட்ட வடை என்று விளம்பர பிரச்சாரம் செய்கின்றனர். திமுக ஆட்சியில் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, விலைவாசி, மின்கட்டணம் உயர்ந்திருப்பதாக அதிமுகவும், பாஜகவும் விளம்பரங்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், திமுகவின் தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி அளிப்பதில் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுவதாக, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடந்துள்ளார்.
அதில், “தேர்தல் ஆணைய விதிகளின் படி தேர்தல் விளம்பரங்களுக்கு அனைத்து கட்சிகளும் தேர்தல் ஆணையத்தில் முன் அனுமதி பெற வேண்டும் என்ற விதி உள்ளது. அவ்வாறு அனுமதி கேட்கும் விளம்பரங்களை இரண்டு நாட்களில் பரிசீலிக்க வேண்டும்.
ஆனால், திமுகவின் தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி அளிப்பதில் தேர்தல் ஆணையம் 6 நாட்களாக காலதாமதம் செய்து வருகிறது. ஒரு சில விளம்பரங்களை அற்ப காரணங்களை சுட்டிக்காட்டி நிராகரிக்கின்றனர். எனவே, தேர்தல் ஆணையம் நியாயமாகவும், நேர்மையாகவும் செயல்பட வேண்டும்.
திமுகவின் விளம்பரங்கள் தொடர்பான முன் அனுமதி விண்ணப்பங்களை நிராகரித்த தமிழக தேர்தல் அதிகாரியின் உத்தரவுகளை ரத்து செய்து விளம்பரங்களை அனுமதிக்க உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா அமர்வில் ஏப்ரல் 15-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…