தீபாவளி போனஸ் : வலியுறுத்திய எடப்பாடி… நிறைவேற்றிய ஸ்டாலின்
தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்டோபர் 29) உத்தரவிட்டுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்கும் 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று இந்த அரசால் அறிவிக்கப்பட்ட நிலையில், குன்னூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழக (டேன்டீ-TANTEA) தொழிலாளர்களுக்கு இதுவரை தீபாவளி போனஸ் வழங்கப்படவில்லை.
தீபாவளிக்கு ஒருசில நாட்களே உள்ள நிலையில் உடனடியாக 20 சதவீத தீபாவளி போனஸை டேன்டீ தொழிலாளர்களுக்கு வழங்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அதனை நிறைவேற்றும் விதமாக முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்திட நீலகிரி மாவட்டத்தின் வனப் பகுதிகள் மற்றும் பிற பொருத்தமான பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் வேலைவாய்ப்பு அளிப்பதை நோக்கமாகக்கொண்டு, தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகமானது (TANTEA) 1976 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தில் நிலவும் கடுமையான நிதி நெருக்கடிக்கிடையிலும், 1093 ஓய்வுபெற்ற தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்களுக்கு பணிக்கொடை மற்றும் ஓய்வூதியப் பணப்பலன்களை வழங்கும்பொருட்டு ரூ.29.38 கோடியினை வழங்கியது,
ஓய்வு பெற்ற தேயிலை தோட்ட கழக தொழிலாளர்கள் வசிக்க ஏதுவாக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வியல் மேம்பாட்டு வளரியத்தால் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புக்கான பயனாளிகளின் பங்களிப்பிற்கு என ரூ.13.46 கோடி வழங்கியது,
தேயிலை தோட்டக் கழக தொழிலாளர்களின் தினக்கூலியை ரூ.438/ ஆக உயர்த்தி ஆணையிட்டது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு தேயிலை தோட்ட கழக ஊழியர் நலன் காக்க தமிழ்நாடு முதலமைச்சர் எடுத்து வருகிறார்கள்.
இந்த ஆண்டு வழங்க வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள் படி நட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு தேயிலை தோட்ட கழக பணியாளர்கள் 10% போனஸ் மட்டுமே பெற தகுதியானவர்கள்.
சுற்றுசூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அரசு இரப்பர் கழகம் மற்றும் தமிழ்நாடு வனத்தோட்டக் கழக பணியாளர்களுக்கு 20% போனஸ் வழங்கப்படுகிறது.
வனத்துறையின் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நிறுவன பணியாளர்களுக்கும் ஒரே அளவில் 20% போனஸ் வழங்க முதலைமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள்.
அதன்படி தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழக பணியாளர்களுக்கும் ரூ.5.72 கோடி செலவில் 20% போனஸ் வழங்கப்படும். இதனால் 3,939 பணியாளர்கள் பயன் பெறுவார்கள்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
இதற்காகத்தான் மும்பையில் குடியேறினேன் : நடிகர் சூர்யா அளிக்கும் விளக்கம்!
தமிழ்நாட்டின் வாக்காளர் எண்ணிக்கை எத்தனை கோடி தெரியுமா?