டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கில் சீமான் நேரில் ஆஜராக திருச்சி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி சரக டிஜஜி வருண்குமார் மற்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் இடையே மோதல் போக்கு வலுத்துள்ளது.
வருண்குமார் குறித்தும் அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவு செய்தனர்.
இந்த நிலையில் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருண்குமார் ஐபிஎஸ் திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்ற எண் 4ல் வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி நீதிபதி பாலாஜி முன்பு நேரில் ஆஜராகிய வருண்குமார் தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார்.
கடந்த ஜனவரி 7ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வருண்குமாரின் வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன் ஆஜரானார்.
அவர், “நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது, மீண்டும் மீண்டும் சீமான் வருண்குமார் டிஐஜி குறித்து தரக்குறைவாக பேசி வருகிறார். ஒரு ஐபிஎஸ் பதவியை சாதாரண பதவி போல் விமர்சிக்கிறார். வருண்குமார் ஐபிஎஸ் படிப்பை பற்றி விமர்சிக்க சீமானுக்கு என்ன கல்வித் தகுதி இருக்கிறது” என்று வாதிட்டார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாலாஜி, வழக்கு விசாரணையை ஜனவரி 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
அதன்படி வழக்கு இன்று (ஜனவரி 21) விசாரணைக்கு வந்தபோது, பிப்ரவரி 19ஆம் தேதி அடுத்த விசாரணை நடைபெறும் என்று தெரிவித்த நீதிபதி அன்றைய தினம் சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.