டெல்லி அதிகாரிகள் நியமன மசோதா நேற்று (ஆகஸ்ட் 7) மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு 131 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 101 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.
இதனிடையே, டெல்லி அதிகாரிகள் நியமன மசோதாவை நிறைவேற்றி பாஜக தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும், மத்தியில் ஆட்சி அதிகாரம் மாறும் போது டெல்லி மசோதா திரும்ப பெறப்படும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியை ஒரு மாநகராட்சியைப் போலத் தரம் குறைக்கும் டெல்லி அதிகாரிகள் நியமன மசோதா ( DelhiServicesBill ) மாநிலங்களவையில் நிறைவேறிய நேற்றைய நாள் மக்களாட்சியின் கறுப்பு நாள் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 8) தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்க்கட்சி ஆட்சி செய்தால் அந்த மாநிலத்தைக் கூடச் சிதைப்போம் என்ற பாஜக-வின் பாசிசம் அரங்கேறிய நாளை வேறு என்ன சொல்வது?,
என்று கேள்வி எழுப்பியுள்ள முதல்வர் ஸ்டாலின் 29 வாக்குகள் வித்தியாசத்தில் ஒரு நாட்டின் தலைநகரையே தரைமட்டத்துக்குக் குறைத்த சதிச் செயலுக்கான தண்டனையை டெல்லி மாநில மக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய மக்களும் விரைவில் தருவார்கள்.
மூன்று மாதமாக மணிப்பூர் எரிகிறது. அதை அணைக்க முடியாமல், டெல்லியைச் சிதைக்கத் துடிக்கும் பா.ஜ.க.வின் தந்திரங்களை மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள் என்று கூறியுள்ளார்.
மேலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநில முதலமைச்சரின் அதிகாரத்தைக் குலைக்கும் இந்த மசோதாவை,
பேரறிஞர் அண்ணாவின் பெயரால் கட்சி நடத்தும் அடிமைக் கூட்டம் ஆதரித்து மாநிலங்களவையில் வாக்களித்திருப்பது எனக்கு அதிர்ச்சியளிக்கவில்லை.
“நான் யாருக்கும் அடிமையில்லை” என்றபடியே, பா.ஜ.க.வின் பாதம் தாங்கி, “கொத்தடிமையாக” தரையில் ஊர்ந்து கொண்டிருக்கிறார் பழனிசாமி என்பதையே இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என்று விமர்சனம் செய்துள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை!
நாடகமும் நடிப்பும் முடிவுக்கு வந்தது: செந்தில் பாலாஜியை விளாசிய கிருஷ்ணசாமி
“மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் பதிலளிக்கவே நம்பிக்கையில்லா தீர்மானம்” – காங்கிரஸ்
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை: தமிழ்நாடு புதிய சாதனை!