முரசொலி செல்வம் மறைவு: திமுக கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விட உத்தரவு!
முரசொலி செல்வம் மறைவையடுத்து, தமிழ்நாடு முழுவதும் இன்று (அக்டோபர் 10) முதல் மூன்று நாட்களுக்கு திமுக கட்சிக் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறு, அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளார்.
கலைஞரின் மருமகனும், முரசொலி பத்திரிகை ஆசிரியருமான முரசொலி செல்வம் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் இன்று காலை காலமானார். அவரது உடல் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு, சென்னை கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.
இதையடுத்து கோபாலபுரம் இல்லத்திற்கு துணை முதலமைச்சர் உதயநிதி, திமுக எம்பி தயாநிதி மாறன் வந்துள்ள நிலையில், முக்கிய திமுக நிர்வாகிகளும், ஏராளமான தொண்டர்களும் குவிந்துள்ளனர்.
இந்த நிலையில் திமுக பொதுச் செயலாளரும், மூத்த அமைச்சருமான துரைமுருகன் தற்போது முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முத்தமிழறிஞர் கலைஞரின் மருமகனும் அரசியல் மேதை முரசொலி மாறன் சகோதரரும் தலைசிறந்த எழுத்தாளர், பத்திரிகையாளருமான முரசொலி செல்வம் இன்று காலை மறைவெய்தினார்.
கழகம் தொடங்கப்பட்ட காலம் தொட்டு கழகத்தின் கொள்கை பரப்பியவரும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றவருமான முரசொலி செல்வத்தின் மறைவினையொட்டி தமிழகம் முழுவதும் இன்று முதல் மூன்று நாட்களுக்கு கட்சி அமைப்புகள் அனைத்தும் கட்சிக் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முரசொலி செல்வத்தின் மறைவுக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக தலைவர்கள், அரசியல் கட்சியினர், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
வேட்டையன் : ட்விட்டர் விமர்சனம்!
பாட்டி மீது அலாதி பாசம்… அமெரிக்காவில் இருந்து ரத்தன் டாடா இந்தியா திரும்பிய பின்னணி!