பன்னீர், சசிகலா, தினகரன் ஆகியோருக்கு அதிமுகவில் இடம் இல்லை என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் நேற்று ஓ.பன்னீர்செல்வத்தை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 28) எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “தொண்டர்களை நம்பி உருவாக்கப்பட்ட கட்சி இது. தற்போது எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் கட்சி வீறுநடை போட்டு வருகிறது.
இந்நிலையில் எம்எல்ஏ ஐயப்பன் போன்ற சட்டமன்ற உறுப்பினர் ஓ.பி.எஸ். அணிக்கு தாவுவதால் எடப்பாடி தரப்புக்கு எந்த பின்னடைவும் இல்லை.
பணம் பாதாளம் வரை பாயும்.. சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பி.எஸ் ஆகியோரிடம் பணம் கோடி கணக்கில் கொட்டி கிடக்கிறது.
அதை வைத்து தான் ஆள் பிடிக்கும் வேலையை செய்து வருகிறார்கள் அதன் முதல்கட்டமாக எம்எல்ஏ ஐயப்பனை பிடித்திருக்கிறார்கள்.
இதுபோல் எத்தனை பேரை பிடித்தாலும் அதிமுகவுக்கு எந்த பின்னடைவும் இல்லை” என்றார்.
எதிர்த்தரப்பும் அதுபோல உங்கள் மேல் குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள் என்ற கேள்விக்கு, “அப்படி எங்களுக்கு எந்த அவசியமும் இல்லை.. நாங்கள் தொண்டர்களை மட்டுமே நம்பியுள்ளோம்” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “உத்தமன் போல பேசுவதில் ஓ.பி.எஸ் வல்லவர். அவரை போல சிறந்த நடிகர் உலகத்திலயே இருக்க முடியாது.
அவர் ஆஸ்கரையே மிஞ்ச கூடியவர். சினிமாவுக்கு போயிருந்தால் ரஜினிகாந்தை தோற்கடித்திருப்பார்
எனவும், ஓ.பி.எஸ் க்கு சொல் புத்தியும் கிடையாது, சுய புத்தியும் கிடையாது. அடுத்தவரின் பேச்சை கேட்டு நேரத்திற்கு ஒரு மாதிரி பேசுகிறார்.
நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதில் ஓபிஎஸ் உறுதியாக இருந்தார்.
அவரை எப்படி தொண்டர்கள் ஏற்றுக்கொள்வார்கள். அம்மாவின் மறைவுக்கு பின் என்னையும் கூட பணத்தை காட்டி அழைத்தார்கள்.. ஆனால் நான் செல்லவில்லை. ஏனெனில் நாங்கள் கொள்கைக்காக நிற்கிறோம்.
தற்போது ஓ.பி.எஸ் செல்ல போவது புரட்சி பயணம் இல்லை. அது மிரட்சி பயணம் ஓ.பி.எஸ்,சசிகலா, தினகரன் ஆகியோருக்கு அதிமுகவில் இடம் இல்லை” என ஜெயக்குமார் தெரிவித்தார்.
- க.சீனிவாசன்
முதல் ஆளாக வந்த பன்னீர் ஆதரவாளர்: அதிமுக போர்டை எடுத்துக்கொண்ட ஜெயக்குமார்