முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் பேச்சு மோசமானதுதான் என்று நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டு திண்டிவனத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாகவும் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் பேரில் திண்டிவனம் மற்றும் விழுபுரம் நகர காவல் நிலையங்களில் சி.வி.சண்முகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இரு பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்குகளை ரத்து செய்ய கோரி சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று (ஆகஸ்ட் 5) விசாரணைக்கு வந்தது.
அப்போது, “சி.வி.சண்முகத்தின் பேச்சு மோசமானதுதான். அவரது பேச்சை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவும் இல்லை.
அதேசமயம் மோதலை ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் எப்படி வழக்குப் பதிவு செய்ய முடியும்” என காவல்துறைக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதற்கு காவல்துறை தரப்பில், “அவரது பேச்சு அரசியலில் இருபிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தி பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் இருந்ததால் இந்த பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டது.
அமைதியின்றி போராட்டம் நடத்தியதாக வி.ஏ.ஓ அளித்த புகாரின் பேரில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டது, அதன் மீது இறுதி அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது என்றும் விளக்கமளிக்கப்பட்டது.
தொடர்ந்து, இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை நீதிபதி ஜெயச்சந்திரன் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
எங்கெங்கு கனமழை?: வானிலை அப்டேட்!
நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா – வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி!