சூடுபிடிக்கும் பல்வீர் சிங் விவகாரம்: விசாரணை அதிகாரியாக அமுதா ஐஏஎஸ்!

Published On:

| By Selvam

திருநெல்வேலி மாவட்டம்‌, அம்பாசமுத்திரம்‌ காவல்‌ உட்கோட்டத்தில்‌ விசாரணைக்‌ கைதிகளைத்‌ துன்புறுத்தியதாக வரப்பெற்ற புகார்கள்‌ தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ள அமுதா ஐஏஎஸ் அவர்களை விசாரணை அதிகாரியாக நியமித்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”திருநெல்வேலி மாவட்டம்‌, அம்பாசமுத்திரம்‌ காவல் உட்கோட்டம் கல்லிடைக்குறிச்சி காவல்‌ நிலைய குற்ற எண்‌:69/2023 என்ற வழக்கில் தொடர்புடைய நபர்களின்‌ பற்களைப்‌ பிடுங்கி பல்வீர் சிங் அம்பாசமுத்திரம்‌ கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் துறையினர்‌ துன்புறுத்தியதாக சமூக ஊடகங்களில் வெளியான புகார்கள் தொடர்பாக காவல்‌ நிலை ஆணை 151-இன்கீழ்‌ சேரன்மகாதேவி உட்கோட்ட நடுவர் அல்லது சார் ஆட்சியர் விசாரணை மேற்கொள்ள மார்ச் 26-ஆம் தேதி மாவட்ட ஆட்சி தலைவரால் உத்தரவிடப்பட்டது.

இந்நிகழ்வில்‌ பல்வீர்சிங்‌ அவர்கள்‌ மார்ச் 29-ஆம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில்‌ பணியாற்றி வந்த ராஜ்குமார், முதல்நிலை காவலர், கல்லிடைக்குறிச்சி காவல்‌ நிலையம்‌, போகபூமன்‌, காவலர்‌, விகே புரம் காவல்நிலையம் , சந்திரசேகரன்‌, காவல்‌ ஆய்வாளர்‌, அம்பாசமுத்திரம் காவல் நிலையம், திருமதி சிராஜகுமாரி, கல்லிடைக்குறிச்சி வட்டக்‌ காவல்‌ ஆய்வாளர்‌, பெருமாள்‌,வி.கே புரம்‌ வட்டக்‌ காவல்‌ ஆய்வாளர்‌, சக்தி நடராஜன்‌, அம்பாசமுத்திரம்‌ காவல்‌ உட்கோட்ட சார்‌-ஆய்வாளர்‌, சந்தானகுமார் தலைமைக்‌ காவலர்‌, அம்பாசமுத்திரம்‌ காவல்‌ நிலையம்‌, மணிகண்டன்‌ முதல்நிலை காவலர்‌, அம்பாசமுத்திரம்‌ காவல் நிலையம்‌ ஆகியோர்‌ ஆயுதப்படைக்கு‌ பணியிட மாற்றம்‌ செய்யப்பட்டுள்ளனர்‌.

மேற்படி புகார்கள்‌ தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்‌ தலைவரின்‌ மார்ச் 26-ஆம் நாளிட்ட உத்தரவிற்கிணங்க, சேரன்மகாதேவி உட்கோட்ட நடுவர்‌ / சார்‌ ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு தனது முதற்கட்ட விசாரணை அறிக்கையினை திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்‌ தலைவருக்கு ஏப்ரல் 3-ஆம் தேதி சமர்ப்பித்தார்.

அம்பாசமுத்திரம்‌ சேரன்மகாதேவி உட்கோட்ட நடுவர்‌ அல்லது சார் ஆட்சியரின்‌ முதற்கட்ட விசாரணை அறிக்கை மற்றும்‌ காவல்‌ உட்கோட்டத்தில்‌ அமைந்துள்ள வேறு காவல்‌ நிலையங்களிலும்‌ இதுபோன்ற நிகழ்வுகள்‌ நிகழ்ந்திருப்பதாக‌ புகார்கள் வரப்பெற்றுள்ளதை கருத்தில்‌ கொண்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ இந்நிகழ்வு தொடர்பாக ஓர்‌ உயர்நிலை அதிகாரி தலைமையில்‌, விசாரணைக்கு உத்தரவிட மார்ச் 4-ஆம் நாளிட்ட கடிதத்தின் மூலம்‌ அரசிற்கு பரிந்துரை செய்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்‌ தலைவரின்‌ பரிந்துரையினை ஏற்று திருநெல்வேலி மாவட்டம்‌. அம்பாசமுத்திரம்‌ காவல்‌ உட்கோட்டத்தில்‌, தற்போது பணியிடை நீக்கத்தில்‌ உள்ள உதவி காவல்‌ கண்காணிப்பாளர்‌ பல்வீர் சிங் மீதும் மற்ற காவல்‌ துறையினர்‌ மீதும் விசாரணை‌ கைதிகளை துன்புறுத்தியதாக வரப்பெற்ற புகார்கள்‌ தொடர்பாகவும்‌, அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில்‌ பல்வேறு காவல்‌ நிலையங்களில்‌ இதுபோன்ற நிகழ்வுகள்‌ நிகழ்ந்திருப்பதாகவும்‌ வரப்பெற்றுள்ள புகார்கள்‌ குறித்தும்‌, விரிவான விசாரணை மேற்கொள்ள அமுதா ஐஏஎஸ் அரசு முதன்மை‌ செயலாளர்‌, ஊரக வளர்ச்சி, மற்றும்‌ ஊராட்சித்‌ துறை அவர்களை உயர்மட்ட விசாரணை அதிகாரியாக நியமித்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஒரு மாத காலத்திற்குள்‌ தமது விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கும்படி அதில்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வம்

கவலையில் விராட்… தேற்றிய ஷாருக்கான்: இணையத்தில் வைரல்!

பிரதமருக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி போராட்டம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share